புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 12 July 2023 6:45 PM GMT (Updated: 12 July 2023 6:46 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ராமநாதபுரம்

எரியாத தெருவிளக்கு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சியில் ஊரணி பள்ளி வாசல் மற்றும் மேற்கு பஸ் நிலையம் முதல் புதுவலசை செல்லும் மெயின் ரோடுகளில் உள்ள தெரு விளக்கு மற்றும் அர்ரஹ்மான் பள்ளி வாசல் செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்கு பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே எரியாத தெருவிளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரூக் உசேன், பனைக்குளம்.

குைறந்த மின்னழுத்தம்

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் மாவடி மதீனா நகரில் குறைந்த மின்னழுத்தத்தில் மின்சாரம் வருகிறது. இதனால் இந்த பகுதியில் வசிப்பவர்களால் மின் சாதனங்களை முழுதிறனுடன் பயன்படுத்த முடியவில்லை. எனவே இங்கு சரியான மின்னழுத்தத்தில் மின்சாரம் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகமது சலீம், புதுமடம்.

அதிகாரிகள் கவனிப்பார்களா?

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் சில பழைய கட்டிடங்கள் பயன்பாடின்றி உள்ளன. அவற்றில் பாம்பு, தேள் போன்ற விஷஜந்துக்கள் உள்ளது. சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மது, கஞ்சா அருந்தும் நிலை உள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

நடவடிக்கை தேவை

ராமநாதபுரம் நகர் பகுதிகளில் உள்ள பொது இடங்களில் சிலர் காலை மற்றும் பகல் வேளைகளில் மது அருந்துகின்றனர். இதனால் இங்கு வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனோகரன், ராமநாதபுரம்.

ஆபத்தான பள்ளம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம்-பரமக்குடி சாலையில் பழைய மீன் மார்க்கெட் எதிரில் 5 ரோடு பிரியும் இடத்தில் பெரிய பள்ளம் உள்ளது. அந்த பள்ளத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வருவோர் விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் உள்ள ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

காதர் மீரா, ஆர்.எஸ்.மங்கலம்.


Next Story