புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 Sep 2023 6:45 PM GMT (Updated: 20 Sep 2023 6:45 PM GMT)

புகார் பெட்டி

கன்னியாகுமரி

சாலையில் தேங்கிய மழைநீர்

திங்கள்சந்தையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் சாலையில் கண்டன்விளை உள்ளது. இந்த சாலையில் இரணியல் வள்ளியாற்று பாலம் அருகில் சாலையோரத்தில் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழைநீர் சாலையில் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையோரத்தில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அரவிந்த், இரணியல்.

சேதமடைந்த படித்துறை

அகஸ்தீஸ்வரத்தில் இருந்து ஈச்சன்விளைக்கு செல்லும் சாலையில் வால்குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த படித்துறை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், படித்துறையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்த படித்துறையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

சீரமைக்கப்படுமா?

கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காக்காத்தோப்பில் ஆதிதிராவிட சமுதாயத்திற்கான சுடுகாடு உள்ளது. அங்கு இறுதி சடங்கிற்கு தண்ணீர் தேவைக்காக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க பயன்படுத்தும் மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால், சுடுகாட்டில் இறுதி சடங்கிற்காக வரும் மக்கள் தண்ணீர் வசதியின்றி பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த மின் மோட்டாரை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகராஜன், ராஜாக்கமங்கலம்.

சுகாதார சீர்கேடு

இறச்சகுளத்தில் இருந்து தாழக்குடிக்கு செல்லும் சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் வடிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்ேதாட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மதி, இறச்சகுளம்.

எரியாத மின்விளக்குகள்

நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மின்விளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால் இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பழுதடைந்த மின்விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின்விளக்கு பொருத்தி எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திக், கோட்டார்.

சீரமைக்க வேண்டும்

தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட சந்தைவிளை சந்திப்பு பகுதியில் பழமையான நூலகம் உள்ளது. இந்த நூலகத்தின் கட்டிடம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. மேலும் நூலகத்தில் இருந்த புத்தகங்கள் மற்றும் பொருட்கள் மாற்றப்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த கட்டிடத்ைத சீரமைத்து மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புத்தகங்களை வைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஷ்ணு, சந்தைவிளை.

தொற்றுநோய் பரவும் அபாயம்

குளச்சல் அருகே உள்ள கோடிமுனை தெறிசீனா பள்ளி தெரு உள்ளது. இந்த தெருவில் கொட்டப்படும் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை முறையாக அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அமீன், குளச்சல்.


Next Story