புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:46 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

தொற்றுநோய் அபாயம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம் தாயமங்கலம் பகுதியில் கழிவுநீர் பாதை ஆக்கிரமிப்பால் கழிவுநீர் குளம்போல் தேங்கிநிற்கிறது. இதனால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கண்ணன், இளையான்குடி.

பயணிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் கல்லலில் இருந்து புரண்டி வழியாக கள்ளிப்பட்டு வரை காலை 8.30 மற்றும் மாலை 4.30 ஆகிய இரண்டு முறை இயக்கப்பட்ட பஸ் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது வரை அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்.

சுவாமிநாதன், கல்லல்.

சேதமடைந்த தொட்டி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் ஊராட்சி வைகைவடகரை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மிகவும் அபாயகரமான நிலையில் சேதமடைந்து உள்ளது. எனவே விபரீதம் எதுவும் நிகழ்வதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திகேயன், மடப்புரம்.

குண்டும், குழியுமான சாலை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஆங்காங்கே சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை சீரமைக்கப்படுமா?

பொதுமக்கள், சிங்கம்புணரி.

போக்குவரத்து நெரிசல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் ஏராளமான வாகனஓட்டிகள் பயணிக்கின்றனர். இப்பகுதியில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருப்பசாமி, காரைக்குடி.


Next Story