தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 22 March 2023 6:45 PM GMT (Updated: 22 March 2023 6:46 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

குளம் தூர்வாரப்படுமா?

கருங்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட சுண்டவிளை பகுதியில் முடவிளை குழிகுளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்த குளத்தை முறையாக பராமரிக்காததால் படித்துறைகள், சுற்றுசுவர்கள் சேதமடைந்தும், கழிவுகள் தேங்கி காணப்படுகிறது. இதனால், குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாருவதுடன், படித்துறையையும் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-சுரேஷ், சுண்டவிளை.

தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளையில் இருந்து ஐதுரூஸ்நகருக்கு செல்லும் சாைலயோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால், இரவு நேரம் அந்த சாலை இருளில் மூழ்கி காணப்படுவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, தெருவிளக்குகள் அமைத்து எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல் காதர், மார்த்தால்.

சுகாதார சீர்கேடு

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள போலீஸ் நிலைய சாலையில் இருபுறங்களிலும் வடிகால் ஓடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓடைகளை முறையாக பராமரிக்காததால் கழிவுகள் தேங்கி தண்ணீர் வடிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. அதன்மீது அமைக்கப்பட்டுள்ள சிலாப்புகளும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், மழை நேரங்களில் வடிகால் ஓடை நிரம்பி கழிவுநீரும், மழை வெள்ளத்துடன் கலந்து சாலையில் ஓடும் நிலை ஏற்படுகிறது. எனவே, வடிகால் ஓடையை தூர்வாரி அதன் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராசிக், கோட்டார்.

விபத்து அபாயம்

நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து இந்து கல்லூரிக்கு செல்லும் சாலையில் தற்போது குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் உள்ள குறுக்குச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அந்த வழிப்பாதையில் தடுப்புகள் முறையாக அகற்றப்படாமல் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தடுப்புகளை முறையாக அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரபீக், கோட்டார்.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

குலசேகரம் அருகே உள்ள செருப்பாலூர் பகுதியில் அரசாங்க புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் மழை காலங்களில் நீர் தேங்கி பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆஷி, செருப்பாலூர்.

சாலை சீரமைக்கப்படுமா?

தெள்ளாந்தி ஊராட்சியில் ஆண்டித்தோப்பு-மண்ணடி தார்ச்சாலை மிகவும் சேதம் அடைந்து உள்ளது. இந்த சாலையை கடந்து தான் மண்ணடி, தென்பாறை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெறுவதால், ஆண்டித்தோப்பு மாமூடு சாலை முதல் மண்ணடி வரையிலான தார்ச்சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

-எஸ்.நாராயணசாமி, . பூதப்பாண்டி.

ஆபத்தான மின்கம்பம்

நாகர்கோவில் செந்தூரான் நகரில் காந்தி காலனி பகுதியில் சாலையோரம் ஒரு மின் கம்பம் அமைக்கப்பட்டது. அந்த மின் கம்பம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் கம்பத்தின் அருகில் உள்ள பள்ளத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கவிதா, செந்தூரான்நகர்.


Next Story