புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 11 Jun 2023 6:45 PM GMT (Updated: 11 Jun 2023 6:46 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ராமநாதபுரம்

நாய்கள் தொல்லை

ராமநாதபுரம் நகராட்சி வெளிப்பட்டினம் பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக செட்டிய தெரு சிவன் கோவில் அருகில் சுற்றித்திரியும் நாய்கள் பொதுமக்களை துரத்துவதால் சிலர் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கடியால் அவதியடையும் நிலையும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலாஜி, ராமநாதபுரம்.

பஸ் நிலையம் வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு சுற்றுவட்டார கிராம மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். ஆனால் இப்பகுதியில் பஸ் நிலையம் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவிந்தராஜ், சத்திரக்குடி.

குடிநீர் தட்டுப்பாடு

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தினமும் குடிநீருக்காக பொதுமக்கள் கால்கடுக்க அலைந்து திரிகின்றனர். மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி மாவட்டம் முழுவதும் காவிரி கூட்டு குடிநீரை சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொதுமக்கள், ராமநாதபுரம்.

பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காடாங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

முத்துகிருஷ்ணன், காட்டாங்குடி.

குறைந்த மின்னழுத்தம்

ராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூர் ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அவ்வப்போது குறைந்த மின்னழுத்த குறைபாடு இருப்பதால் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சோழந்தூர்.


Next Story