கிராம மக்கள் காலில் விழுந்து தொழிலாளியை மன்னிப்பு கேட்க வைத்ததாக புகார்


கிராம மக்கள் காலில் விழுந்து தொழிலாளியை மன்னிப்பு கேட்க வைத்ததாக புகார்
x

கிராம மக்கள் காலில் விழுந்து தொழிலாளியை மன்னிப்பு கேட்க வைத்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர்

செந்துறை:

பட்டாசு வெடித்தனர்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள வாளரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன். இவர் பா.ஜ.க. தெற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இவரது மகளுக்கு கடந்த 8-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி ஆதிச்சநல்லூர் கிராமத்தில் இருந்து தாய் மாமன் சீர்வரிசை எடுத்து வந்துள்ளார். அப்போது வாளரக்குறிச்சியில் உள்ள மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்களின் தெருவில் பட்டாசு வெடித்துள்ளனர்.

மறுநாள் அன்பரசனின் தம்பியும், கூலித்தொழிலாளியுமான திருநாவுக்கரசு, அந்த தெருவில் உள்ள பெட்டிக்கடையில் சிகரட் வாங்கி, கடைக்கு ன்பு புகைத்துள்ளார். அப்போது அங்கு இருந்தவர்கள் பட்டாசு வெடித்தது மற்றும் சிகரெட் புகைத்தது தொடர்பாக கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

காலில் விழுந்து மன்னிப்பு

அப்போது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும், தி.மு.க. கிளை செயலாளருமான கண்ணன், இது குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அங்கு வந்து, அவர்களை கலைந்து போக செய்தனர். மறுநாள் கிராம முக்கியஸ்தர்கள் அறிவுறுத்தலின்படி திருநாவுக்கரசு, அந்த கிராம மக்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து திருநாவுக்கரசை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க செய்தது குறித்து அன்பரசன் தபால் மூலம் ஜனாதிபதி, கவர்னர் மற்றும் மாவட்ட காவல்துறை உள்ளிட்ட 14 அரசுத்துறை அதிகாரிகளுக்கு புகார் செய்தார். மேலும் அவர் இது குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசிலும் புகார் அளித்தார்.

கைது

அதன்பேரில் மற்றொரு சமூகத்தை சேர்ந்த தி.மு.க. கிளை செயலாளர் கண்ணன், ராஜேஷ், ராமச்சந்திரன், ரமேஷ், அருண், வேலுச்சாமி உள்ளிட்டோர் மீது எஸ்.சி., எஸ்.டி. தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக ராஜேஷ் என்பவரை கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கண்ணன் உள்ளிட்ட 5 பேரை இரண்டு தனிப்படை அமைத்து, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story