தனியார் தொண்டு நிறுவனத்தை கண்டித்துதூத்துக்குடியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தனியார் தொண்டு நிறுவனத்தை கண்டித்து தூத்துக்குடியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் தொண்டு நிறுவனம் மூலம் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் 7 மாத சம்பள பாக்கியை வழங்காததை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மனு
ஆறுமுகநேரியிலுள்ள ஆதவா தொண்டு நிறுவனம் மூலம் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியராக ஏராளமானவர்கள் பணியாற்றி வந்தனர். இந்த ஆசிரியர்களுக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள், அந்த தொண்டு நிறுவன அலுவலகத்தை அணுகிய போது சரிவர பதில் அளிக்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் ஆசிரியைகள், தங்களுக்கு 7 மாத சம்பளத்தை வழங்க வேண்டும், தங்களிடம் பெற்ற பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும், எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மக்கள் கட்சி மாநிலத் தலைவர் காந்தி மள்ளர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்டனர்.