கூடுதல் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்துபோலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை


கூடுதல் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்துபோலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 7 Oct 2023 6:45 PM GMT (Updated: 7 Oct 2023 6:45 PM GMT)

தேவாரத்தில் கூடுதல் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

டாஸ்மாக் கடை திறப்பு

தேவாரம் பேரூராட்சியில் ஏற்கனவே 2 அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த நிலையில் தேவாரம்-ராணி மங்கம்மாள் சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடையின் அருகில் குடியிருப்புகள் உள்ளன. இந்த கடைக்கு செல்லும் சாலையில் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இதனால் இங்கு அரசு டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என்று பொதுமக்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் புதிதாக அரசு டாஸ்மாக் கடை திடீரென திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இதைத்தொடர்ந்து 50-க்கும் மேற்பட்டோர் தேவாரம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். பின்னர் கூடுதல் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று கோஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து தேவாரம் போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story