1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது


1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2022 6:45 PM GMT (Updated: 17 Oct 2022 6:46 PM GMT)

திண்டுக்கல்லில் வெளிமாநிலத்திற்கு கடத்தி சென்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் பகுதியில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நத்தம்- செந்துறை பிரிவு சாலையில் வந்த சரக்கு வேனை நிறுத்தினர். இதற்கிடையே போலீசாரை கண்டதும் சரக்கு வேனில் வந்த 2 பேர் தப்பியோடிவிட்டனர். வேனில் கிளீனராக வந்த வாலிபர் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார்.


பின்னர் சரக்கு வேனில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் மூட்டை, மூட்டையாக 1 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேன், ரேஷன் அரிசி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த அமர்நாத் (வயது 23) என்பதும், தப்பி ஓடியது நத்தம் பகுதியில் ரேஷன் அரிசியை சேகரித்து வெளிமாநிலத்திற்கு கடத்திச் செல்ல முயன்ற மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த தர்மர் மற்றும் வேன் டிரைவர் முத்துக்குமார் என்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அமர்நாத்தை போலீசார் கைது செய்தனர் மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.





Next Story