4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது
![4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது 4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/05/28/711794-confiscation-001.webp)
மதுரையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரகசிய தகவல்
மதுரையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை வண்டியூர் சங்குநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ஒரு வீட்டில் ரேஷன் அரிசியை அரைத்து மாவாக்கி வருவது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த மாவு மில் உரிமையாளர் கார்த்திக் (வயது 37) என்பவரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 60 மூடைகளில் இருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வேன் சிக்கியது
அதே போன்று வலையங்குளத்தில் இருந்து மதுரை விமானநிலையம் பின்புறம் ரோட்டில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே உணவு கடத்தல் பிரிவு போலீசார் அந்த பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் மூடை, மூடையாக ரேஷன் அரிசி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை ஓட்டி வந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தேவராஜ் (43) என்பவரை கைது செய்தனர். பின்னர் வேனுடன் 1,600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் காமராஜர்புரத்தை சேர்ந்த பாண்டி என்பவரை தேடி வருகின்றனர். நேற்று நடத்திய அதிரடி சோதனையில் 4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.