ரெயில்வே மந்திரி ராஜினாமா செய்யாவிட்டால் மாநிலம் முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


ரெயில்வே மந்திரி ராஜினாமா செய்யாவிட்டால் மாநிலம் முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x

ஒடிசா ரெயில் விபத்துக்கு பொறுப்பு ஏற்று ரெயில்வே மந்திரி ராஜினாமா செய்யாவிட்டால் காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சென்னை,

மணிப்பூர் விவகாரத்தில் பா.ஜ.க. அரசு, அங்கு ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அனுப்பி மக்கள் மத்தியில் மத அடிப்படையிலான பிரிவினைவாதத்தை ஏற்படுத்த பல்வேறு வழிவகைகளை ஏற்படுத்தியது. அதே வேளை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழ் கலாசாரத்துக்கு எதிராகவும் கருத்து கூறி வருகிறார்.

பிரதமர் மோடி வந்த பிறகுதான் இந்தியாவில் வளர்ச்சி வந்ததாக கவர்னர் தெரிவித்து இருக்கிறார் அது தவறான விஷயம். மோடி வந்த பிறகுதான் தொழில் வளர்ச்சி குறைந்து உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 9-ல் இருந்து 4 சதவீதமாக குறைந்துவிட்டது.

ஆர்ப்பாட்டம்

ஒடிசா ரெயில் விபத்துக்கு இன்று வரை யாரும் பொறுப்பேற்று கொள்ளவில்லை. ஏன், ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தனது பதவியை ராஜினாமா செய்யாமல் இருக்கிறார் என்று தெரியவில்லை.

இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டின் நேரடி மேற்பார்வையின் கீழ் விசாரணை நடைபெற வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வரும். இதற்கு சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை.

இன்னும் ஒரு வார காலத்தில் ரெயில்வே துறை மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதவாத அரசியல்

கட்சியின் முன்னணி துறைகள் மற்றும் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் கூறியதாவது:-

மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் இன்று வரை வெளியில் வராமல் இருக்கின்றது. அங்கு ஒரு இன அழிவு நடந்து கொண்டிருக்கிறது. எந்தவித தொலைதொடர்பு வசதிகளும் அங்கு இல்லை. ஒரு மாநிலத்தில் மதவாத அரசியல் நடைபெறும்பொழுது என்ன பாதிப்பு ஏற்படும் என்பதற்கு மணிப்பூர் கலவரம் முன்னுதாரணமாக இருக்கின்றது.

2017-ம் ஆண்டு முதல் மதவாத அரசியலை பா.ஜ.க அங்கு முன்னெடுத்துள்ளது. அங்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்துத்துவாவை வளர்த்து அரசாங்கமே துணை நின்று ஒரு இனத்தை அழித்து வருகின்றது. 200-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன.

மக்கள் மீதே மக்களுக்கு வெறுப்பை விதைத்து அதன் மூலம் லாபம் சம்பாதிக்க பா.ஜ.க. அரசு நினைக்கிறது. இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் ஆ.கோபண்ணா, பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, தியாகிகள் பிரிவு மாநில பொதுச்செயலாளர் பி.ஞானவேல் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story