சட்டம் - ஒழுங்கை கெடுக்க சதி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு


சட்டம் - ஒழுங்கை கெடுக்க சதி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
x

சட்டம்-ஒழுங்கை கெடுக்க சிலர் சதி செய்கிறார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

அரியலூர்

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்ட பணிகளின் தொடக்க விழா, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் நேற்று காலை நடைபெற்றது. விழாவிற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை தாங்கினார்.

36,691 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் ரூ.30 கோடியே 26 லட்சத்து 11 ஆயிரம் செலவில் 51 முடிவுற்ற திட்டப்பணிகளை ெதாடங்கி வைத்தார். ரூ.1 கோடியே 56 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு அரசு துறைகளின் கீழ் 27 ஆயிரத்து 70 பயனாளிகளுக்கு ரூ.52 கோடியே 49 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.221 கோடியே 80 லட்சத்து 28 ஆயிரம் செலவில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் ரூ.31 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரத்து மதிப்பீட்டிலான 54 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு அரசு துறைகளின் கீழ் 9 ஆயிரத்து 621 பயனாளிகளுக்கு ரூ.26 கோடியே 2 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சாதாரண காரியம் அல்ல

இதனை தொடர்ந்து நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடையே பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்கள் தொண்டை தவிர மாற்றுச் சிந்தனை இல்லாத மக்கள் நல அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 10 ஆண்டு காலம் பாழ்படுத்தியதை மீட்டெடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அதனை உடனே நடத்தி விட முடியுமா என்ற மலைப்பு கூட எங்களுக்கு முதலில் இருந்தது. ஆனால் அத்தகைய பாதாளத்தில் இருந்து தமிழகத்தை பல்வேறு வகைகளில் மீட்டெடுத்துவிட்டோம் என்பது தான் உண்மை.

உயர்ந்து நிற்கிறோம்

போட்டி போட்டுக்கொண்டு தொழில் நிறுவனங்கள் இன்றைக்கு தமிழகத்திற்கு வருகிறது. ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக உயர்ந்து நிற்கிறோம். அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றப் பாதைக்கு நாம் போய்க்கொண்டு இருக்கிறோம். வேளாண்மை உற்பத்தி அதிகமாகி இருக்கிறது. வேளாண் பாசன பரப்பு வசதி அதிகமாகி இருக்கிறது. உயர் கல்வியிலும், பள்ளி கல்வியிலும் பல்வேறு விருதுகளை பெற்று வருகிறோம்.

மகளிருக்கு கட்டணமில்லா பஸ் வசதி ஏற்படுத்தித் தந்ததன் மூலமாக, பெண்களுக்கு நிரந்தரமான வருமானத்தை ஈட்டி தந்திருக்கிறோம். சில நாட்களுக்கு முன்னால் மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருக்கக்கூடிய பேராசிரியர் ஜெயரஞ்சன் என்னிடத்தில் ஒரு அறிக்கையை கொண்டு வந்து கொடுத்தார்.

ஒரே ஒரு கையெழுத்தின் மூலமாக...

கழக ஆட்சி மலர்ந்ததும் மகளிருக்கு கட்டணமில்லா பஸ் வசதியை ஏற்படுத்தி கொடுத்தோம். அந்த திட்டத்தின் மூலமாக மகளிர் சமுதாயம் எத்தகைய பயனை அடைந்து வருகிறது என்பது குறித்த அந்த ஆய்வறிக்கையை கொண்டு வந்து கொடுத்தார். அதில் குறிப்பிட்டிருந்தார்கள். பஸ்களில் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்பதால் மாதத்துக்கு சுமார் 900 ரூபாய் சேமிக்க முடிகிறது என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

இதன் மூலமாக ஏழை எளிய பெண்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள். இதனால், மாத வருமானத்தில் பெருமளவு பணத்தை சேமிக்க முடிகிறது என்றும் - இந்த சேமிப்புப் பணத்தை குடும்பத்தின் வளர்ச்சிக்காகச் செலவு செய்ய முடிகிறது என்றும் சொல்லி இருக்கிறார்கள். ஒரே ஒரு கையெழுத்தின் மூலமாக கோடிக்கணக்கான மகளிர் சமுதாயத்தின் மனதில் மகிழ்ச்சியை விதைக்க முடிந்திருக்கிறது.

1½ லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு

15 மாத காலத்தில் 1 ½ லட்சம் இலவச வேளாண் (விவசாய) மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை காப்பாற்ற அனைத்தையும் செய்திருக்கிறோம். கொரோனாவை வென்று காட்டினோம். மழை- வெள்ளத்தில் இருந்து மக்களை காத்தோம். நேற்று கூட (அதாவது நேற்று முன்தினம்), பெரம்பலூர் மாவட்டத்தில், காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி, புதிய சிப்காட் தொழிற்சாலையை திறந்து வைத்தேன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. பேசும் போது குறிப்பிட்டாரே, அந்த தொழிற்சாலை மூலம், 50 ஆயிரம் பேர் அதிலும் பெரும்பாலும் பெண்கள் வேலைவாய்ப்பு பெற இருக்கிறார்கள். அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி, இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக முதலிடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. நம்மை விட மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் பெரிய மாநிலங்கள் கூட தொழில்வளர்ச்சியில் நமக்குக் கீழே தான் இருக்கிறது.

இலக்கை அடைய முடியும்

கடந்த ஆட்சியில், 10 ஆண்டு காலம் தொழில் வளர்ச்சியில் தேக்க நிலை நிலவினாலும், அதற்கு முன்பு, தலைவர் கலைஞர் தலைமையிலான கழக அரசு போட்ட அடித்தளத்தாலும், கடந்த 18 மாதங்களாக எட்டு கால் பாய்ச்சலில் நாம் ஈர்த்து வரும் முதலீடுகளாலும் பெற்ற பெருமை தான் என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம். நான் இப்போது கூறிய இரண்டுமே தனித்தனி நிகழ்வுகள் அல்ல. ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை உயர்த்துவோம் என்ற இலக்கின் வெவ்வேறு பரிமாணங்கள் தான் இவை. நான் முதல்வன் திட்டமானாலும் ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்களை 2 ஆயிரத்து 200 கோடி ரூபாயில் தொழில்நுட்ப மையங்களாக மேம்படுத்துவதானாலும், பள்ளிக்கல்வியிலும், உயர்கல்வியிலும், நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகளானாலும் புதிதாக வளர்ந்து வரும் உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதனாலும் 4-ம் தொழிற்புரட்சியை ஒட்டிய முயற்சிகள் ஆனாலும் அனைத்துமே நம் இலக்கை நோக்கிய ஒருங்கிணைந்த திட்டமிடலின் அங்கங்கள் தான். இத்தகைய தொலைநோக்கு பார்வையோடு திட்டமிட்டால் தான், இலக்கை அடைய முடியும்.

10 ஆண்டு காலத்தை நாசமாக்கியவர்கள்

இதில் அரியலூர், பெரம்பலூர் என அனைத்து மாவட்டங்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் பயன்பெற வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் பின்தங்கிய பகுதி, மாவட்டம் என்று எதுவும் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. அதை நோக்கித்தான் உழைத்து வருகிறோம். இவை அனைத்தும், ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திராவிட முன்னேற்ற கழக அரசு நடத்தி காட்டும் செயல்கள். ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது, ஒரு முதல்-அமைச்சர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு தான் கடந்த கால ஆட்சி. தனது கையில் அதிகாரம் இருந்த போது கைகட்டி வேடிக்கை பார்த்து தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தி 10 ஆண்டு காலத்தை நாசமாக்கியவர்கள் இன்று இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கிறார்கள். யாரிடம் என்பது உங்களுக்கு தெரியும். பேட்டிகள் அளிக்கிறார்கள். அதையெல்லாம் மக்கள் பார்த்து, உங்கள் யோக்கியதைதான் எங்களுக்குத் தெரியுமே என்று ஏளனமாக சிரிக்கிறார்கள்.

தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது

நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள். ஐயகோ கெடவில்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள். ஐயோ, தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்று வயிறு எரிகிறது இவர்களுக்கெல்லாம். "புலிக்கு பயந்தவன், என் மேல வந்து படுத்துக்கோ" என்று சொல்வார்களே, அதுபோல சிலர் "ஆபத்து, ஆபத்து" என்று அலறி கொண்டு இருக்கிறார்கள். இப்படி சொல்லும் சிலருக்கு, 'இருக்கும் பதவி நிலைக்குமா' என்று பயமாக இருக்கிறது. அதனால் தான் மக்களை பார்த்து ஆபத்து ஆபத்து என அலறுகிறார்கள். மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மக்களுக்கு ஆபத்பாந்தவனான ஆட்சி தான் இந்த ஆட்சி. உங்கள் ஆட்சி நடக்கிறது, கவலைப்படாதீர்கள்.

விமர்சனங்களை வரவேற்கிறேன்

விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். விமர்சனங்களை நான் உள்ளபடியே வரவேற்கிறேன். ஆனால் விஷமத்தனம் கூடாது. விமர்சனம் செய்பவர்களுக்கு அதற்கான அருகதை இருக்க வேண்டும். தங்கள் கையில் ஆட்சி இருந்த போது எதையும் செய்யாமல் இருந்து விட்டு, இன்று மகா யோக்கியரை போல, உலக மகா உத்தமனை போல பேசுபவர்களுக்கு விமர்சனம் செய்வதற்கான யோக்கியதை இல்லை.

தமிழகம் இழந்த பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, இதுவரை அடையாத பெருமைகளையும் உயரத்தையும் அடையத்தான் நமது ஆட்சியின் குறிக்கோள். அந்த குறிக்கோளோடு நான் பணியாற்றுகிறேன். அந்த குறிக்கோளை அடைய என்னை ஒப்படைத்து கொண்டு நான் செயல்பட்டு கொண்டிருக்கிறேன். இந்த மேடையில் அமர்ந்திருக்கக்கூடிய அமைச்சர்களை பார்க்கிறீர்கள், மக்கள் பிரதிநிதிகளை பார்க்கிறீர்கள், இவர்கள் எல்லோருடைய ஒத்துழைப்போடு, இவர்களுடைய உழைப்பால், தமிழகம் அத்தகைய உயரத்தை விரைவில் அடையும் என்பதை உறுதியோடு சொல்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story