மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடம் கட்டுமான பணிகள் தீவிரம்


மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடம் கட்டுமான பணிகள் தீவிரம்
x

சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடத்தில் உதயசூரியன் போன்று 3 வளைவுகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள், சிந்தனைகளை அடுத்த தலைமுறை அறியும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று கருணாநிதி நினைவிட முகப்பில் 3 வளைவுகள் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த நவம்பர் 8-ந் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த 28-ந் தேதி ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. கருணாநிதி நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இதற்காக கருணாநிதி நினைவிட வளாகத்தில் இரும்பு தடுப்புகள் மற்றும் தகரம் மூலம் 30 அடி உயரத்துக்கு வேலி அமைக்கப்பட்டது.

ஜூன் 3-ந் தேதி திறக்க ஏற்பாடு

3 வளைவுகள் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக அங்கு 15 அடி ஆழத்தில் துளைகள் போடப்பட்டு உள்ளது. 3 வளைவுகள் சிமெண்ட் கான்கிரீட்டில் அமைக்கப்படுகிறது. அந்த கான்கிரீட் வளைவுகளில் கிரானைட் அல்லது மார்பிள் கற்கள் பதிக்கப்பட உள்ளது. மேலும் திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.

கருணாநிதி நினைவிட கட்டுமானங்கள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் 6 மாதத்தில் முடிக்கப்பட்டு வருகிற ஜூன் 3-ந் தேதி கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் போது, கருணாநிதியின் நினைவிடத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.


Next Story