விழுப்புரம் மாவட்டத்தில் புதிய மேம்பாலங்கள் அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் புதிய மேம்பாலங்கள் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை கண்காணிப்புப்பொறியாளர் தலைமையிலான உள்தணிக்கை குழுவினர் ஆய்வு செய்து, அதன் விவரங்களை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கும்படி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் விழுப்புரம் அருகே காவணிப்பாக்கம் சாலையில் மலட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலம், விழுப்புரம்-செஞ்சி சாலை கூத்தமேடு மேம்பாலம், செஞ்சி வடபாலை சாலையில் வராக நதியின் குறுக்கே கட்டப்பட்டுவரும் மேம்பால பணிகளை கண்காணிப்பு பொறியாளர் சத்தியபிரகாஷ் தலைமையிலான குழுவினர் கள ஆய்வு செய்து தரக்கட்டுபாடு பணிகளை மேற்கொண்டனர். அப்போது கண்காணிப்பு பொறியாளர் சத்தியபிரகாஷ் புதிதாக கட்டப்பட்டு வரும் 3 மேம்பாலப்பணிகளை விரைந்தும், தரமாகவும் செய்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஆய்வின் போது கோட்ட பொறியாளர்கள் சிவசேனா, சுந்தர், உதவி கோட்ட பொறியாளர்கள் வீரப்பன், விவேகானந்தன், லோகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.