வீடு புகுந்து மிரட்டிய கட்டிட தொழிலாளி கைது


வீடு புகுந்து மிரட்டிய கட்டிட தொழிலாளி கைது
x
தினத்தந்தி 20 Aug 2023 6:45 PM GMT (Updated: 20 Aug 2023 6:46 PM GMT)

ராமநாதபுரம் அருகே வீடு புகுந்து மிரட்டிய கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அக்ரஹாரம் ரோடு முகவை ஊருணி மேற்குதெருவை சேர்ந்தவர் பாலுச்சாமி. இவருடைய மகன் கண்ணதாசன் (வயது 59). இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை துறையில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் ராமநாதபுரம் அக்ரஹாரம் ரோடு பகுதியில் சோழவந்தானை சேர்ந்த மேஸ்திரி அன்பு என்பவரின் மேற்பார்வையில் புதியதாக வீடு கட்டி வருகின்றார். இந்த வீட்டை சிவகங்கை மாவட்டம் லாடனேந்தல் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் மற்றும் அவரது மைத்துனர் விக்னேஷ் ஆகியோர் ஆட்களை வைத்து கட்டி வருகின்றார். இந்த சூழ்நிலையில் கண்ணதாசன் தான் வசித்து வரும் பழைய வீட்டில் புதிதாக பூஜை அறை கட்டி வந்துள்ளார். அந்த சமயத்தில் வீட்டில் இருந்த பணம் உள்பட சில பொருட்கள் காணாமல் போய் உள்ளது. இதுகுறித்து சந்தேகத்தின் அடிப்படையில் கண்ணதாசன், வேல்முருகன் தரப்பினரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் நேற்று முன்தினம் கண்ணதாசன் வெளியே சென்றிருந்த சமயம் வீட்டின் கேட்டில் ஏறி குதித்து உள்ளே புகுந்து அவரது வயதான தாய், மனைவி மற்றும் மகள் ஆகியோரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றாராம். இதுகுறித்து கண்ணதாசன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.


Related Tags :
Next Story