புஷ்பத்தூரில் ஊராட்சி தலைவர் பதவிநீக்கம் குறித்து கருத்து கேட்பு கூட்டம்


புஷ்பத்தூரில் ஊராட்சி தலைவர் பதவிநீக்கம் குறித்து கருத்து கேட்பு கூட்டம்
x

புஷ்பத்தூரில் ஊராட்சி தலைவர் பதவிநீக்கம் குறித்து கருத்து கேட்பு கூட்டம், பழனி தாசில்தார் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல்

பழனி அருகே புஷ்பத்தூர் ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சியின் தலைவராக செல்வராணி உள்ளார். இந்தநிலையில் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு இடையே பிரச்சினை இருப்பதாகவும், இதனால் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறையாக பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார் வந்தது. இதையடுத்து ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவரை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக கருத்துகேட்பு கூட்டம் நடத்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று வார்டு உறுப்பினர்கள் இடையே கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு பழனி தாசில்தார் சசிக்குமார் தலைமை தாங்கினார். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்களிடம் தனித்தனியாக கருத்துகேட்டு பதிவு செய்தனர். இதற்கிடையே கூட்டம் நடந்தபோது, பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார் நேரில் வந்து பார்வையிட்டார். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், புஷ்பத்தூர் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவி தொடர்பாக வார்டு உறுப்பினர்களின் கருத்து பற்றிய அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பேரில் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றனர்.

இதற்கிடையே கூட்டம் தொடர்பாக ஊராட்சி தலைவர் செல்வராணி தரப்பில் கூறுகையில், ஊராட்சியில் பெரும்பான்மை வார்டு உறுப்பினர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. எனவே நல்ல முடிவு கிடைக்கும் என்றனர். இந்த கூட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வகையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.



Related Tags :
Next Story