தூத்துக்குடியில் அயோடின் உப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்; கலெக்டர் தகவல்


தூத்துக்குடியில் அயோடின் உப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்; கலெக்டர் தகவல்
x

தூத்துக்குடியில் அயோடின் உப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடக்கிறது என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 6 மாவட்டங்களை சேர்ந்த உப்பு தயாரிப்பு நிறுவனங்கள், உப்பள உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு அயோடின் கலந்த உப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடக்கிறது. கூட்டத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம்-மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

அயோடின் செறிவூட்டப்பட்ட உப்பு விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டும், தமிழகத்தில் உள்ள 100 சதவிகித மக்களுக்கும் அயோடின் உப்பு சென்றடைய வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை வெற்றியடைய செய்திடவும், உப்பு உற்பத்தியாளர்கள் அனைவரும் அயோடின் கலந்த உப்பை உற்பத்தி செய்யவேண்டும் என்ற நோக்கத்தினை நிறைவேற்றும் பொருட்டும் இக்கூட்டம் நடக்கிறது.

எனவே இந்த கூட்டத்தில் அனைத்து உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story