ஹைவேவிஸ் பகுதியில் தொடர் மழை:சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு :சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


ஹைவேவிஸ் பகுதியில் தொடர் மழை:சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு :சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 6 July 2023 6:45 PM GMT (Updated: 6 July 2023 6:46 PM GMT)

கம்பம் அருகே வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி

கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இந்த அருவிக்கு ஹைவேவிஸ் மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. அதன்படி ஹைவேவிஸ் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று காலை முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி பிச்சைமணி கூறுகையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஹைவேவிஸ் பகுதியில் உள்ள தூவானம் ஏரியில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிப்பகுதி மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.


Related Tags :
Next Story