தொடர் கனமழை எதிரொலி - செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு


தொடர் கனமழை எதிரொலி - செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு
x
தினத்தந்தி 9 Dec 2022 3:13 AM GMT (Updated: 9 Dec 2022 7:56 AM GMT)

தொடர் மழை காரணமாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம்,பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சென்னை,

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து அரும் புயல் மாமல்லபுரம் அருகே இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் லேசான முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இதனால் சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள செம்பரபாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.

இதில் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியின் மொத்த உயரமான 21 அடியில், நீர் மட்டம் 17 அடியாக உள்ளது. குடிநீருக்காக 159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழை சற்று நின்றதையடுத்து உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் உபரி நீர் திறக்கப்பட உள்ளது. ஏரிகளில் இருந்து இன்று நண்பகல் 12 மணியளவில் உபரி நீர் திறக்கப்பட உள்ளது.

அதன்படி, செம்பரபாக்கம், புழல், பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 100 கன அடி உபரிநீர் திறக்கப்பட உள்ளது. உபரி நீர் திறக்கப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story