நாகையில் தொடர் மின்வெட்டு


நாகையில் தொடர் மின்வெட்டு
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:46 PM GMT)

நாகையில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

நாகப்பட்டினம்


நாகையில் நேற்று முன்தினம் இரவு அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. மேலும் நகரின் சில பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மிக்ஸி, கிரைண்டர், டி.வி. உள்ளிட்டவை சரியாக செயல்படவில்லை. நேற்று முன்தினம் இரவு 8.45 மணியிலிருந்து தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு 11.45 மணியிலிருந்து சுமார் 1 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த மின்வெட்டால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தூக்கமின்றி தவித்தனர். மேலும் கொசு தொல்லையும் அதிகமாக இருந்ததால் பச்சிளம் குழந்தைகள் அவதிக்குள்ளாகினர். இது குறித்து நாகை மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவி கூறும்போது:-செல்லூர் துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் மின்பாதையில் மின்கம்பத்தில் உள்ள இன்சுலேட்டர் பழுதாகி விட்டது. தகவல் கிடைத்தவுடன் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதனை சரி செய்து மின்சாரத்தை கொடுத்தனர். அதே நேரத்தில் மற்றொரு இடத்தில் மின்கம்பத்தில் உள்ள இன்சுலேட்டரும் பழுதாகி விட்டது. இரு வேறு இடங்களில் ஒரே நாளில் அடுத்தடுத்து இன்சுலேட்டர்கள் பழுதானதால் விட்டு, விட்டு மின் தடை ஏற்பட்டது. தொடர்ந்து பழுது ஏற்படுத்துவதால் மின் கம்பத்தில் உள்ள அனைத்து இன்சுலேட்டர்களையும் மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளோம். அப்படி மாற்றும் பட்சத்தில் இது போன்ற மின்தடை இனி இருக்காது என்றார்.


Next Story