சித்தார்கோட்டையில் தொடர் மின்வெட்டு


சித்தார்கோட்டையில் தொடர் மின்வெட்டு
x
தினத்தந்தி 13 July 2023 6:45 PM GMT (Updated: 13 July 2023 6:46 PM GMT)

சித்தார்கோட்டையில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

சித்தார்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் முஸ்தரிஜஹான் ரைசுதீன் கூறியதாவது:- சித்தார் கோட்டை கிராமத்திற்கு தேவிபட்டினம் பகுதியில் இருந்து மின் சப்ளை கொடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து அறிவிக்கப்படாத மின் நிறுத்தம் ஏற்பட்டு வருகிறது. இதனால் முதியோர் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் குடிநீர் வசதியும் பொதுமக்களுக்கு சீராக வழங்க முடியாமல் ஊராட்சி நிர்வாகம் சிரமப்படுகிறது.

பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத நிலையை மின்சார துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக மின்சார துறை அலுவலர்கள், ஊழியர்களிடம் விவரம் கேட்டால் பல்வேறு சாக்கு போக்குகளை சொல்லி சமாளித்து விடுகின்றனர். எனவே உயர் அதிகாரிகள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தடை இல்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வப்போது மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்து பொதுமக்கள் நலன் கருதி மின்சாரம் வழங்கிட வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு கூறினார்.


Next Story