திருக்கோவிலூர் பகுதியில் தொடர் மின்வெட்டு்; பொதுமக்கள் கடும் அவதி


திருக்கோவிலூர் பகுதியில் தொடர் மின்வெட்டு்; பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 25 Oct 2023 6:46 PM GMT)

திருக்கோவிலூர் பகுதியில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே திடீர் மின் வெட்டு ஏற்பட்டு, அதன்பிறகு மின்வினியோகம் செய்யப்படும்போது உயரழுத்தம் ஏற்படுவதால் மின்சாதனங்கள் அடிக்கடி பழுதாகி வருகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்கள் இதுபற்றி சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 12-க்கும் மேற்பட்ட முறை மின்வெட்டு ஏற்பட்டது. திடீர் திடீரென மின் வெட்டு ஏற்படுவதும், பின்னர் மின்வினியோகம் நடப்பதுமாகவும் இருந்தது. குறிப்பாக மாலை 5 மணிக்கு மேல் மின்வெட்டு பிரச்சினை சற்று அதிகமாக இருந்தது. இதனால் பல வீடுகளில் உள்ள மின்விசிறிகள், மிக்சி உள்ளிட்ட பல்வேறு மின்சாதன பொருட்கள பழுதானதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் தொடர் மின்வெட்டால் திருக்கோவிலூர் பகுதி மக்கள் கடும் அவதியடைந்ததுடன், மின்வெட்டு ஏற்படாமல் இருக்கவும், சீராக மின்வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story