ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்


ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
x

ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

நாகப்பட்டினம்

பனங்குடி சி.பி.சி.எல்.நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் போனஸ் தொகையை உடனே வழங்க கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். உள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி ஒரே ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சி.பி.சி.எல். ஆலைக்கு தற்சமயம் தேவைப்படும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திக்கொண்டு பணி இழக்கும் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வார விடுமுறை, அரசு விடுமுறை காலக்கட்டத்திற்குரிய நிலுவை தொகையை பெற்றுதர வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய போனஸ் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதில் துணைத்தலைவர்கள் முத்துக்குமரன், முரளிதரன், தங்கமணி உள்ளிட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த நாகப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், திருமருகல் வருவாய் ஆய்வாளர் சுந்தர், ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார், பனங்குடி கிராம நிர்வாக அலுவலர் சித்ரா ஆகியோர் ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் நாளை(வியாழக்கிழமை) வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சி.பி.சி.எல். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story