சமையல் எண்ணெய், பருப்பு திருட்டு


சமையல் எண்ணெய், பருப்பு திருட்டு
x

திருவோணம் அருகே அரசு பள்ளி சத்துணவு மையத்தில் சமையல் எண்ணெய், பருப்பு திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

திருவோணத்தை அடுத்துள்ள ஏனாதி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சத்துணவு கூட கட்டிடம் இல்லாததால், மாணவர்களுக்கு சமைத்து உணவு வழங்குவதற்கான சத்துணவு பொருட்கள் அதே பள்ளிக்கூட கட்டிடத்தின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற உணவு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. சம்பவத்தன்று இரவு பள்ளிக்கூட கட்டிடத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 13 கிலோ பருப்பு, 10 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சத்துணவு மைய அமைப்பாளர் சந்திரலேகா திருவோணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏனாதி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மணி (வயது 36), பாண்டி (22), தினேஷ் (26) ஆகிய 3 பேரும் சேர்ந்து பள்ளிக்கூடத்தின் கதவை உடைத்து பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story