1,359 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் நாள்தோறும் எகிறும் பாதிப்பு


1,359 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் நாள்தோறும் எகிறும் பாதிப்பு
x

தமிழகத்தில் நேற்று 1,359 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எகிறுகிறது. அந்தவகையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நேற்று புதிதாக 25 ஆயிரத்து 689 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 724 பேரும், பெண்கள் 635 பேரும் உள்பட 1,359 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 616 பேர், செங்கல்பட்டில் 266 பேர், திருவள்ளூரில் 71 பேர், கோவையில் 64 பேர் உள்பட 35 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

அரியலூர், திண்டுக்கல், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் புதிதாக பாதிப்பு இல்லை. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 81 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 207 பேரும் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

621 பேர் 'டிஸ்சார்ஜ்'

தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி 5 ஆயிரத்து 912 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 790 பேரும், செங்கல்பட்டில் 1,079 பேரும், திருவள்ளூரில் 308 பேரும், கோவையில் 288 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் 355 பேர் ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 621 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 21 ஆயிரத்து 552 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story