தமிழகத்தில் 1,472 பேருக்கு கொரோனா; கள்ளக்குறிச்சி தவிர அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு


தமிழகத்தில் 1,472 பேருக்கு கொரோனா; கள்ளக்குறிச்சி தவிர அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு
x

தமிழகத்தில் நேற்று 1,472 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

நேற்று புதிதாக 25 ஆயிரத்து 591 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 778 பேரும், பெண்கள் 694 பேரும் உள்பட 1,472 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் கள்ளக்குறிச்சி தவிர அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு பதிவாகியுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 624 பேர், செங்கல்பட்டில் 241 பேர், கோவையில் 104 பேர், திருவள்ளூரில் 85 பேர் உள்பட 37 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 80 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 246 பேரும் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சையில் 7 ஆயிரத்து 458 பேர்

தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி 7 ஆயிரத்து 458 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 3 ஆயிரத்து 395 பேரும், செங்கல்பட்டில் 1,329 பேரும், கோவையில் 429 பேரும், திருவள்ளூரில் 409 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் 365 பேர் ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 691 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 22 ஆயிரத்து 860 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story