தமிழக விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை தொடங்கியது -அமைச்சர் பேட்டி


தமிழக விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை தொடங்கியது -அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 23 Dec 2022 8:59 PM GMT (Updated: 24 Dec 2022 12:12 AM GMT)

வெளிநாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நேற்றே தொடங்கி விட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தூத்துக்குடி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சீனா, ஜப்பான், ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களை ரேண்டமாக 2 சதவீதம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது.

தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் இன்று (அதாவது நேற்று) முதல் கொரோனா பரிசோதனை பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

ஆஸ்பத்திரிகளில் தயார் நிலை

தமிழகத்தில் 6 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. படுக்கைகளை பொறுத்தவரை கடந்த கொரோனா காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. அதுபோல ஆக்சிஜனை போதுமான அளவில் இருப்பில் வைத்திருக்க தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.

எனவே, யாரும் பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை. தற்போது பரவி வருவது ஒமைக்ரானின் ஒரு வகையை சேர்ந்த உருமாற்ற வைரஸ் ஆகும்.

முககவசம், சமூக இடைவெளி

கொரோனா விதிமுறைகள் என்பது ஏற்கனவே நடைமுறையில் தான் உள்ளது. கூட்டங்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் பாதுகாப்புக்காக முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற விதிமுறைகளை கடைபிடித்தால் நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story