பூச்சி தாக்குதலால் பட்டுக்கூடு விலை குறைவு: விவசாயிகள் கவலை


பூச்சி தாக்குதலால் பட்டுக்கூடு விலை குறைவு: விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:46 PM GMT)

உப்புக்கோட்டை பகுதியில் பூச்சி தாக்குதலால் பட்டுக்கூடு விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

தேனி

உப்புக்கோட்டை, கோட்டூர், சின்னமனூர், கூடலூர், போடி மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் மல்பெரி செடிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. பட்டுக்கூட்டில் கோலார் கோல்டு (மஞ்சள்), ஒயிட் (வெள்ளை) என இரு ரக பட்டுக்கூடு அனைத்து பருவங்களிலும் உற்பத்தியாகும். ஆனால் விலை சரிவர கிடைப்பதால் சந்தைகளில் அனைத்து நாட்களிலும் கடும் கிராக்கி உள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் ஒயிட் ரக பட்டுக்கூடு தான் 80 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த வகை பட்டுக்கூடு வளர்ப்புக்கு மிதமான பருவநிலை முக்கியமானதாகும். குறுகிய காலத்தில் வருமானம் ஈட்டி விவசாயிகளின் நண்பனாக திகழ்கிறது பட்டுப்புழு வளர்ப்பு. உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகளை கோவை, கர்நாடக மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதுகுறித்து உப்புக்கோட்டையை சேர்ந்த விவசாயி கூறுகையில், நான் ஒரு ஏக்கரில் மல்பெரி செடிகள் சாகுபடி செய்துள்ளேன். இதன் மூலம் 80 முட்டைகள் வரை வளர்க்கலாம். முட்டை வைத்த 30 நாட்களில் புழுக்கள் நன்றாக வளர்ந்து விடும்.

வழக்கமான நாட்களில் 80 முட்டைகள் வளர்த்தால் 60 முதல் 70 கிலோ வரை கூடுகள் உற்பத்தியாகும். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிலோவிற்கு ரூ.500 முதல் 600 வரை கிடைத்தது. இதன் காரணமாக நல்ல லாபம் கிடைத்தது. தற்போது பட்டுக்கூடுவில் பூச்சி தாக்குதல் உள்ளதால் விலை குறைந்து ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பட்டுக்கூடு உற்பத்தி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் என்றார்.


Next Story