கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறுவர்களுக்கு மாறுவேட போட்டிகள்


கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறுவர்களுக்கு மாறுவேட போட்டிகள்
x
தினத்தந்தி 6 Sep 2023 7:15 PM GMT (Updated: 6 Sep 2023 7:15 PM GMT)

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறுவர்களுக்கு மாறுவேட போட்டிகள் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சிறுவர்களுக்கு மாறுவேட போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விளையாட்டு போட்டிகள்

கிருஷ்ணர் அவதார தினம் கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் ஏராளமான இடங்களில் விளையாட்டு போட்டிகள், உறியடித்தல், கலைநிகழ்ச்சிகள், மாறு வேட போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கிராமப்புறங்களில் பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

காரைக்குடி அருகே கோவிலூரில் கிராம மக்கள் சார்பில் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி பெண்களுக்கான கோலப்போட்டி, சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், கோ-கோ போட்டி, சாக்கு போட்டி, கயிறு இழுத்தல் போட்டி, இளைஞர்களுக்கான உறியடித்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. மேலும் பெண்களுக்கு மியூசிக் சேர், லக்கி கார்னர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற்றது. இதேபோல் சிறுவர்-சிறுமியர்களுக்கு மாறுவேட போட்டி, கிருஷ்ணர்-ராதை வேடமணிந்து வருதல் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

கோவில்களில் சிறப்பு வழிபாடு

பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்குடி அருகே அரியக்குடியில் உள்ள திருவேங்கட முடையான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேவகோட்டை ரெங்கநாதபெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நேற்று காலை மூலவர் திருமஞ்சன அலங்காரத்திலும், இரவு கருட வாகனத்திலும் ஸ்ரீகிருஷ்ணர் வீதி உலா நிகழ்ச்சியும் தொடர்ந்து சிறப்பு ஆராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story