செடிகளில் காய்த்து வீணாகும் பருத்தி பஞ்சுகள்

செடிகளில் காய்த்து பருத்தி பஞ்சுகள் வீணாகிறது.
முதுகுளத்தூர்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய அதிகமான கிராமங்களில் மிளகாய் மற்றும் பருத்தி விவசாயம் அதிகமாக நடைபெற்று வருகின்றது. மிளகாய் சீசன் பெரும்பாலான கிராமங்களில் முடிந்துவிட்டது. பருத்தி சீசனும் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனிடையே முதுகுளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பூசேரி, மட்டியாரேந்தல், தாழியாரேந்தல், செங்கற்படை உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாய நிலங்களில் வளர்ந்து நிற்கும் பருத்தி செடிகளில் பருத்தி பஞ்சுகள் காய்த்து குலுங்குகின்றன. ஆனால் செடிகளில் காய்த்துள்ள இந்த பருத்தி பஞ்சுகளும் பறிக்கப்படாமல் செடிகளிலேயே கிடந்து வீணாகி வருகின்றன.
இது குறித்து பூசேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி சாந்தகுமார் கூறும்போது, பெரும்பாலானோர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வேலைக்கு சென்று விடுகின்றனர். அதுபோல் பருத்தி செடிகளில் காய்த்துள்ள பருத்தி பஞ்சுகளை பறிக்க வேலைக்கு ஆட்கள் கிடைப்பது கிடையாது. ஆனால் தற்போது பருத்தியின் விலை குறைந்துவிட்டது. பருத்தி பஞ்சுகளை பறிக்க தொழிலாளர்கள் யாரும் கிடைக்காததாலும், பருத்திப்பஞ்சின் விலை குறைந்து விட்டதாலும் அதை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளோம். நேரம் கிடைக்கும் போது வீடுகளில் உள்ளவர்களை வைத்து பறித்து வருகிறோம் என்றார்.