ஆரணி பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி பங்கேற்பு


ஆரணி பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி பங்கேற்பு
x

ஆரணி பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி பங்கேற்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சி கூட்டம் மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வக்கீல் கே.சுகுமார், பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் கலாதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மன்ற உறுப்பினர்கள் ரகுமான்கான், முனுசாமி, சதீஷ், குமார், சந்தானலட்சுமி, குணபூபதி, பொன்னரசி, சுகன்யா, அருணா ஆகியோர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மர்ம நபர்கள் அவதூறு நோட்டீஸ் வினியோகித்ததை கண்டித்தும் வாயில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு கூட்டத்தில் பங்கேற்றனர்.

மன்ற பொருட்களை இளநிலை உதவியாளர் முருகவேல் வாசித்தார். அத்திக்குளம் தெருவில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகிலும், புதிய இருளர் காலனியிலும், பஜார் தெருவில்-சன்னதி தெரு சந்திப்பிலும் என மூன்று இடங்களில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.13 லட்சத்து 5 ஆயிரத்தில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் முடிவில், 10-வது வார்டு கவுன்சிலர் கண்ணதாசன் நன்றி கூறினார்.


Next Story