மகிழ்ச்சி ஆரவாரத்துடன் நடந்த எதிர்சேவை: கள்ளழகர் இன்று வைகையில் இறங்குகிறார் -பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்


மகிழ்ச்சி ஆரவாரத்துடன் நடந்த எதிர்சேவை: கள்ளழகர் இன்று வைகையில் இறங்குகிறார் -பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
x

சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்குகிறார். அந்த கண்கொள்ளா காட்சியைக் காண பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.

மதுரை

சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்குகிறார். அந்த கண்கொள்ளா காட்சியைக் காண பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.

சைவமும், வைணவமும்

"கோவில் மாநகர்" என்ற பெருமைக்குரிய மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பும், உலக பிரசித்தியும் பெற்றதாகும்.

மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த சித்திரை விழா நடக்கிறது. சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 20-ந் தேதி முகூர்த்த கால் ஊன்றி திருவிழா ஆரம்பமானது.

மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 30-ந்தேதி பட்டாபிஷேகமும், மே 1-ந்தேதி திக் விஜயமும் நடந்தன. மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த 2-ந் தேதியும், நேற்று முன்தினம் மாசி வீதிகளில் தேரோட்டமும் விமரிசையாக நடைபெற்றது.

அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார்.

எதிர்சேவை

அங்கு கள்ளழகரை மக்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, வர்ணித்து பாட்டுப்பாடி அதிர்வேட்டுகள் முழங்க கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட், வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார்.

நேற்று இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்து சேர்ந்தார். அங்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அழகரை ஆடிப்பாடி வரவேற்றனர்.

வைகையில் இறங்குகிறார்

இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை சூடி தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருள்வார்.

காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்குகிறார். வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்து கள்ளழகரை வரவேற்கிறார். காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளனர்.

அதனால் மதுரை மாநகரம் விழாக்கோலத்துடன் உள்ளது. வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினார்கள். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

அங்கப்பிரதட்சணம்

கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது பக்தர்கள் செம்புகளில் சர்க்கரையை நிரப்பி சூடம் ஏற்றி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முடிக்காணிக்கை செலுத்துவார்கள்.

வைகையில் இறங்கியபின், இன்று மதியம் 12 மணிக்கு கள்ளழகர் ராமராயர் மண்டபம் செல்கிறார். வேடம் அணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து அவரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார்.

சாபவிமோசனம்

நாளை (சனிக்கிழமை) அதிகாலை 6 மணிக்கு ஏகாந்த சேவையும், பக்தி உலாவும் நடக்கின்றன. காலை 9 மணியளவில் திருமஞ்சனமாகி அங்கிருந்து சேஷவாகனத்தில் புறப்பட்டு பகல் 11 மணிக்கு வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பின்பு கருட வாகனத்தில் அமர்ந்து, மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அனுமன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் நடக்க உள்ளது.

அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு இரவு 12 மணி முதல் விடிய விடிய தசாவதார காட்சி நடக்கிறது. அப்போது அழகர் 10 அவதாரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

பூப்பல்லக்கு

7-ந்தேதி காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்துடன் உலா வருகிறார். மதியம் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் எழுந்தருளுகிறார்.

இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகிறார். நள்ளிரவுக்கு பின் 2.30 மணி அளவில் கள்ளழகர் பூப்பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 8-ந் தேதி காலை 8.50 மணிக்கு கருப்பணசுவாமி கோவிலில் பிரியாவிடை பெற்று அழகர்மலைக்கு புறப்படுகிறார். அன்று இரவு அப்பன்திருப்பதியில் திருவிழா நடக்கிறது. 9-ந்தேதி அழகர்மலையை அடைகிறார்.

இன்று உள்ளூர் விடுமுறை

அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி, மதுரை மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆற்றில் அழகர் இறங்குவதற்காக வைகை அணையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வைகை ஆற்றில் தண்ணீர் ஓடுவது பக்தர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் மழை பெய்து வருவதால் மதுரை நகர் குளுமையாக உள்ளது.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில் பாதுகாப்புக்காக அந்த பகுதியை சுற்றிலும் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவை, பகலாக்கும் வகையில் மின்விளக்குகள் ஜொலிக்கின்றன. பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இது தவிர டிரோன் கேமரா மூலம் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்துசெல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்துகழகத்தின் சார்பில் மதுரைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.


Next Story