இந்து மகாசபா நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு


இந்து மகாசபா நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
x

இந்து மகாசபா நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் மடவார்விளாகத்தைச் சேர்ந்தவர் இசக்கிராஜா (வயது 46). இவர் அகில பாரத இந்து மகாசபா தென்மண்டல தலைவராகவும், தென்காசி மாவட்ட தலைவராகவும் உள்ளார்.

நேற்று முன்தினம் இரவில் அவரது வீட்டின் வெளியே திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி சென்று பார்த்தனர்.

நாட்டு வெடிகுண்டு வீச்சு

அப்போது வீட்டின் வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறிய நிலையில் கிடந்தது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டு கிடந்தன. அங்குள்ள கண்காணிப்பு கேமராவும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

காரின் கண்ணாடிகளை மர்மநபர்கள் உடைத்துவிட்டு, நாட்டு வெடிகுண்டையும் வீசிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்கை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story