50 சதவீத மானியத்தில்250 நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம்


50 சதவீத மானியத்தில்250 நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம்
x

நாமக்கல் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் 250 நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதியான நபர்கள் வருகிற ஜூன் மாதம் 12-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாட்டுக்கோழிப்பண்ணை

கால்நடை பராமரிப்புத்துறை மூலம், 2023-24-ம் நிதி ஆண்டில், நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதில் மாவட்டம் ஒன்றுக்கு 3 முதல் 6 பயனாளிகள் அல்லது குறைந்தபட்சம் 3 பயனாளிகளை தேர்வு செய்து, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமும், தகுதியும் உள்ள பயனாளிகள், தங்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்திற்கு சென்று விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம். விண்ணப்பம் அளிக்க கடைசிநாள் அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி ஆகும்.

50 சதவீத மானியம்

பயனாளி திட்ட செலவினத்தில் 50 சதவீதம் அல்லது உச்சபட்ச வரையறைகளை ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 625-க்கு எஞ்சியுள்ள திட்ட செலவினத்தை சொந்த செலவு அல்லது வங்கிக் கடன் மூலம் திரட்ட வேண்டும். நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க தேவையான கோழி கொட்டகை, கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு, 4 மாத தீவன செலவு ஆகியவற்றுக்கான மொத்த செலவில், 50 சதவீதம் மானியம் மாநில அரசால் வழங்கப்படும்.

ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையில், 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள், ஓசூர் கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும். பயனாளிகள், விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் 30 சதவீதம் பழங்குடியினர் மற்றும் பட்டியல் வகுப்பினராக இருக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story