சேலையூரில் வாகன சோதனையில் நாட்டு துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு பறிமுதல் - 7 பேர் கைது


சேலையூரில் வாகன சோதனையில் நாட்டு துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு பறிமுதல் -  7 பேர் கைது
x

சேலையூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து 7 பேரை கைது செய்தனர்.

தாம்பரம்,

சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியான சந்தோஷபுரம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே சேலையூர் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனங்களில் அவ்வழியாக வந்த 7 பேர் போலீசாரை கண்டவுடன் வாகனங்களை திருப்பி கொண்டு தப்பிச்செல்ல முயற்சித்தனர். இதனை கண்ட போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (வயது 32), யுவராஜ் (30), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பாரதி (34), மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கீரத்திராஜன் (22), கீழப்பாக்கம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (30), விழுப்புரம் பகுதியை சேர்ந்த மணிகன்டன் (33), பெருங்குடி பகுதியை சேர்ந்த நாகராஜ் (27) என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களை மேற்கொண்டு சோதனை செய்தபோது ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டு ஒன்றும் மேலும், ஒன்றே முக்கால் கிலோ கஞ்சா மற்றும் ஒரு கத்தி இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவற்றை அவர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து அவர்கள் ஏழு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதில் பாரதி என்பவர் மீது கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு என 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், ஹரிபிரசாத் மற்றும் யுவராஜ் ஆகியோர் மீது தலா 2 கொலை முயற்சி வழக்கும், 2 சண்டை வழக்குகளும், நாகராஜ் என்பவர் மீது 2 கொலை முயற்சி வழக்குகளும், 4 சண்டை வழக்குகளும் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது.


Next Story