தம்பதிக்கு ஆயுள் தண்டனை


தம்பதிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 21 Aug 2023 7:45 PM GMT (Updated: 21 Aug 2023 7:46 PM GMT)

சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

திண்டுக்கல்

குழந்தை இல்லாத தம்பதி

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 32). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி கிருத்திகா (22). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

ராஜேஷ்குமாரும், கிருத்திகாவும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் வசிக்கிற தங்களது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தனர். அந்த உறவினரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஒரு தம்பதிக்கு 4 வயதில் மகள் இருந்தாள்.

அந்த சிறுமியிடம் ராஜேஷ்குமாரும், கிருத்திகாவும் நெருங்கி பழகி வந்தனர். சிறுமியும் அவர்களுடன் நன்றாக பழகினாள்.

சிறுமி பரிதாப சாவு

இந்தநிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராஜேஷ்குமார், கிருத்திகா ஆகியோர் பல்லடம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அப்போது உறவினர் வீட்டில் வசித்த சிறுமியை தங்களுடன் சில நாட்கள் அனுப்பி வைக்குமாறு, சிறுமியின் பெற்றோரிடம் கேட்டு கொண்டனர்.

குழந்தை இல்லாததால் ஆசையுடன் கேட்பதாக நினைத்து, சிறுமியை அவர்களுடன் பெற்றோர் அனுப்பி வைத்தனர். அதன்படி சிறுமியை தங்களது சொந்த ஊரான செங்குளத்துப்பட்டிக்கு ராஜேஷ்குமார், கிருத்திகா தம்பதி அழைத்து வந்தனர்.

இதையடுத்து ஒருசில நாட்களில் சிறுமி கீழே விழுந்து காயமடைந்ததாக கூறி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

பலாத்காரம் செய்து கொலை

இதுபற்றி தகவல் அறிந்த வேடசந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துர்காதேவி தலைமையில் வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையும் அதை உறுதி செய்தது.

இதுதொடர்பாக வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமார், கிருத்திகா ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி கருணாநிதி வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் அமுதா ஆஜராகி வாதாடினார்.

தம்பதிக்கு ஆயுள் தண்டனை

இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி கருணாநிதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ்குமாருக்கு இந்திய தண்டனை சட்டம் (கொலை) 302-ன் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், இளம்சிறார் நீதிசட்டம் பிரிவு (சிறுவர்களை தாக்குதல்) 75-ன் கீழ் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும், போக்சோ சட்டத்தின் (பலாத்காரம்) கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

மேலும் ராஜேஷ்குமாரின் மனைவி கிருத்திகாவுக்கு இ.த.ச. 302-ன் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், இளம்சிறார் நீதி சட்டம் 75-ன் கீழ் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story