நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அம்பேத்கர் படம் வைக்க கோரிய வழக்கு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அம்பேத்கர் படம் வைக்க கோரிய வழக்கு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அம்பேத்கர் படம் வைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "இந்திய அரசியல் சட்டத்தை வகுத்த அம்பேத்கர் புகைப்படத்தை அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் வைக்க வேண்டும் என கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் அரசு அலுவலகங்களில் அவரது படத்தை வைக்க வேண்டுமென முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

அதைபோல தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர், முதல்-அமைச்சர், மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், திருவள்ளுவர், தந்தை பெரியார், முன்னாள் முதல்-அமைச்சர்கள் காமராஜர், அண்ணா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அம்பேத்கர் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அவரது புகைப்படத்தை வைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "அம்பேத்கர் படம் வைப்பது தொடர்பாக ஏற்கெனவே உத்தரவு உள்ளது. எனவே மீண்டும் அதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்துள்ளதால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக" எச்சரித்தனர்.

இதையடுத்து மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story