பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை


பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை
x
தினத்தந்தி 20 Jun 2023 7:45 PM GMT (Updated: 20 Jun 2023 7:45 PM GMT)

பக்ரீத் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை ஆனது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பக்ரீத் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை ஆனது.

பக்ரீத் பண்டிகை

பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறும். அதன்படி நேற்று செவ்வாய்கிழமை என்பதால் சந்தை நடைபெற்றது. சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. விவசாயிகள் விவசாய பணிக்கு மாடுகளை வாங்கி சென்றனர்.

இதற்கிடையில் வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் கேரளாவுக்கு அதிகமாக கொண்டு செல்லப்பட்டன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

ரூ.3 கோடிக்கு வர்த்தகம்

பொள்ளாச்சி சந்தைக்கு கோவை உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த வாரம் 2,500 மாடுகள் மட்டும் விற்பனைக்கு வந்தன. இந்த வாரம் பக்ரீத் பண்டிகையையொட்டி 3,700 மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் மாடுகளை வாங்குவதற்கு 400 வியாபாரிகள் சந்தைக்கு வந்திருந்தனர். இதன் காரணமாக விற்பனை விறு, விறுப்பாக நடைபெற்றது.

கடந்த வாரம் ரூ.2 கோடிக்கு விற்பனை ஆன நிலையில், இந்த வாரம் ரூ.3 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றது. அடுத்த வாரமும் மாடுகள் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

நாட்டு காளை ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், நாட்டு பசு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், நாட்டு எருமை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், மொரா ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், செர்சி ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story