குறு, சிறு தொழில்களுக்கான கடன் உதவி முகாம்


குறு, சிறு தொழில்களுக்கான கடன் உதவி முகாம்
x
தினத்தந்தி 24 Aug 2023 6:45 PM GMT (Updated: 24 Aug 2023 6:45 PM GMT)

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு கடன் உதவி வழங்கும் முகாம் வருகிற 1-ந்தேதி வரை நடக்கிறது என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு கடன் உதவி வழங்கும் முகாம் வருகிற 1-ந்தேதி வரை நடக்கிறது என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடன் உதவி

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடன் உதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ்கடன் உதவி வழங்கி வருகிறது.

சிறப்பு முகாம்

அதன்கிளை அலுவலகம், நாஞ்சிக்கோட்டைசாலையில் இயங்கி வருகிறது. இந்த, அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் கடந்த 21-ந்தேதி தொடங்கி வருகிற 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது.

இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1 கோடியே 50 லட்சம் வரை வழங்கப்படும்.

ஆய்வு கட்டணம்

இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும்.

இந்த அரிய வாய்ப்பினை மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த புதிய தொழில்முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story