மண், தண்ணீர் தரத்தின் அடிப்படையில் பயிர்களை தேர்வு செய்யவேண்டும்


மண், தண்ணீர் தரத்தின் அடிப்படையில் பயிர்களை தேர்வு செய்யவேண்டும்
x

மண், தண்ணீர் தரத்தின் அடிப்படையில் பயிர்களை தேர்வு செய்ய வேண்டும் என பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டது.

வேலூர்

பயிற்சி முகாம்

கே.வி.குப்பத்தை அடுத்த மாச்சனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட, வேளாண் முன்னேற்ற குழுவிற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் உத்தரகுமார் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். வேலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் முகாமை ஆய்வுசெய்தார்.

அப்போது, வேர்க்கடலை பயிரை பார்வையிட்டு, வேளாண்மை திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் விளக்கிக் கூறி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வினித்மேக்தலின், வேளாண் திட்டங்களை உழவன்செயலியில் பதிவு செய்யும் முறைகள் குறித்து பேசினார். உதவி வேளாண்மை அலுவலர்கள் ராஜன், காயத்ரி, விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் எம்.ராமசாமி, கால்நடை மருத்துவர் நரேந்திரன், வேளாண் அலுவலர் பிரீத்தி, உதவி தோட்டக்கலை அலுவலர் மகேந்திரன் ஆகியோர் வேளாண்மைத் துறை சார்ந்த கருத்துருக்களை எடுத்துக் கூறினர்.

மண்ணின் தரம்

மண்மாதிரி எடுத்தலின் அவசியம், மண்ணின் தரம், தண்ணீரின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் பயிர்களை தேர்வு செய்ய வேண்டும். நுண்ணூட்ட சத்தின் அவசியம், அரசு மானிய விலையில் வழங்கும் இடுபொருள்கள் போன்றவை பற்றி முகாமில் விளக்கிக் கூறப்பட்டது. இதில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு 1 லிட்டர் அளவுகொண்ட இயற்கை பயிர் ஊக்கிக் கரைசல் இலவசமாக வழங்கப்பட்டது. வேளாண்மை அலுவலர் பிரவீணா நன்றி கூறினார்.


Next Story