சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் மாதவரம்-சிறுசேரி சிப்காட் வழித்தடத்திற்கு அனுமதி


சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் மாதவரம்-சிறுசேரி சிப்காட் வழித்தடத்திற்கு அனுமதி
x

சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வழித்தடத்துக்கு முறையாக கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை

கைவிடப்படும் 6 ரெயில் நிலையங்கள்

சென்னையில் 2-ம் கட்டமாக ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்தில் 3 வழித்தடங்கள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் 42.6 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த பணியில் 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த பணிகள் அனைத்தையும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில், 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் 750 மீட்டருக்கும் குறைவான தொலைவில் திட்டமிடப்பட்ட 6 மெட்ரோ ரெயில் நிலையங்களை கைவிட மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி டவுட்டன் ஜங்ஷன், பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, தபால் பெட்டி, செயிண்ட் ஜோசப் கல்லூரி ஆகிய 6 ரெயில் நிலையங்கள் அமைப்பதை கைவிட முடிவு செய்துள்ளது.

அடையாறு ஆற்றில் பணிகள்

இந்தத் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (3-வது வழித்தடம்) 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (4-வது வழித்தடம்) 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்) 47 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், மயிலாப்பூரில் 3 நடைமேடைகளுடன் மெட்ரோ ரெயில் நிலையம் அமையவுள்ளது. மயிலாப்பூர் நிலையம் 3-வது மற்றும் 4-வது வழித்தடத்துக்கான பரிமாற்ற நிலையமாக இருக்கும். 4 நிலைகளுடன் தரைக்குக் கீழே 35 மீ (115 அடி) ஆழத்தில் இந்த நிலையம் அமையவுள்ளது.

இந்த நிலையத்தில் 4 சுரங்கப்பாதை துளையிடும் எந்திரங்கள் வெவ்வேறு நிலைகளில் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த வழித்தடத்தில் மயிலாப்பூர், இந்திரா நகர், தரமணி உள்ளிட்ட இடங்களில் பக்கிங்காம் கால்வாய் மற்றும் அடையாறு ஆறுகளில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

கடலோர ஒழுங்குமுறை ஆணையம்

இதன்படி 1,242.19 சதுர மீட்டர் பகுதி கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதியில் வருகிறது. இங்கு பணிகள் மேற்கொள்ள கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதி பெற சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. இந்தநிலையில், மத்திய கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் இதற்கு அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில் 20 உயர்மட்ட ரெயில் நிலையங்கள் மற்றும் 30 சுரங்க ரெயில் நிலையங்கள் அமைய உள்ளது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.


Next Story