கடலூரில் பரபரப்பு: போலீஸ்காரரின் குடும்பத்தினரை உயிருடன் தீ வைத்து கொலை செய்ய முயற்சி...!


கடலூரில் பரபரப்பு: போலீஸ்காரரின் குடும்பத்தினரை உயிருடன் தீ வைத்து கொலை செய்ய முயற்சி...!
x

கடலூர் அருகே வீட்டுக்குள் பெட்ரோலை ஊற்றி போலீஸ்காரரின் குடும்பத்தினரை உயிருடன் தீ வைத்து கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.

கடலூர்,

கடலூர் அருகே கேப்பர் மலையில் மத்திய சிறை உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இங்கு கும்பகோணம் அருகே சுவாமி மலையை சேர்ந்த மணிகண்டன் (வயது 33) என்பவர் உதவி சிறை அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

இதற்காக அவர் தனது குடும்பத்தினருடன் மத்திய சிறை அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். தற்போது மருத்துவ விடுப்பில் உள்ள அவர் வெளியூர் சென்றுள்ளார். இதனால் வீட்டில் மணிகண்டனின் தாய் சாவித்ரி, தந்தை ராமலிங்கம், மனைவி பவ்யா மற்றும் 2 மகன்கள் இருந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை மணிகண்டன் குடியிருக்கும் காவலர் குடியிருப்புக்கு வந்த மர்மநபர்கள் சிலர், வீட்டின் சமையல் அறையின் ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் அந்த அறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அந்த நேரத்தில் மணிகண்டனின் குடும்பத்தினர் வேறு ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்ததால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் வரை ஓடிச் சென்று நின்றது.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த 8-ந் தேதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த எண்ணூர் கைதி தனசேகரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்த போது, மணிகண்டனுக்கும் தனசேகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக தனசேகர் கூலிப்படையை ஏவி, மணிகண்டன் குடும்பத்தினரை உயிருடன் எரித்து கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம் என தெரியவந்தது. இருப்பினும் தனசேகர் கூலிப்படையை ஏவி மணிகண்டன் குடும்பத்தினரை கொலை செய்ய முயற்சி செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரை குடும்பத்தினருடன் தீ வைத்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story