சம்பா நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி


சம்பா நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 30 Jan 2023 6:45 PM GMT)

சங்கராபுரம் ஒன்றியத்தில் சம்பா நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி விவசாயிகளுக்கு அதிகாரி வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் வட்டாரத்தில் 10 ஆயிரம் ஏக்கர் அளவிலான சம்பா பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் அறுவடைக்கு பின் பயறு திட்டத்தில் 4 ஆயிரம் ஏக்கரில் உளுந்து பயிரிட 50 சதவீத மானியத்தில் வம்பன்-8 ரக உளுந்து விதைகள் வேளாண் விரிவாக்க மையம் சங்கராபுரம் மற்றும் வடபொன்பரப்பியில் தயார் நிலையில் உள்ளது. உழவர்கள் தங்களுடைய வயலில் மண் வளத்தை மேம்படுத்தி வருமானத்தை அதிகரிக்க வேளாண் விரிவாக்க மையத்தில் உளுந்து விதைகள் வாங்கி பயிரிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் நெல், மக்காச்சோளம், பருத்தி, மரவள்ளி, கரும்பு பயிரிடப்படும் வயல்களில் பயிர் பல்வகைப்படுத்துதல் மற்றும் சுழற்சி முறையில் பயறு வகை பயிர்களை பயிரிடுவதால் மண்ணில் தழைச்சத்து நிலை நிறுத்தப்பட்டு, திடமான மண் கட்டமைப்பு ஏற்படுவதுடன் நிலம் உழவுக்கு உகந்ததாக மாறி மண்வளம் மேம்படும். இதனால் மண்ணில் பல்வேறுபட்ட தாவர மற்றும் நன்மை செய்யும் நுண்ணுயிர் இனங்கள் வாழ உகந்த சூழ்நிலை உருவாகும். மேலும், நுண்ணுயிரிகளின் செயல்பாடுகளால் ரசாயன உரங்கள் பயன்பாடு குறையும். பயிர்களின் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைந்து பல்வேறுபட்ட பயன்களை பெறமுடியும் என சங்கராபுர வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி தெரிவித்தார்.


Next Story