தஞ்சை மாவட்டத்தில் இலக்கை எட்டியது குறுவை சாகுபடி


தஞ்சை மாவட்டத்தில் இலக்கை எட்டியது குறுவை சாகுபடி
x

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி இலக்கை தாண்டி நடைபெற்றுள்ளது. இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி இலக்கை தாண்டி நடைபெற்றுள்ளது. இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளது.

குறுவை சாகுபடி

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) விளங்கி வருகிறது. இங்கு குறுவை சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

அதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும் அங்கிருந்து 16-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்படி நடப்பாண்டு தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 951 ஏக்கரும், திருவாரூர் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 214 ஏக்கரும், நாகை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 805 ஏக்கரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 93 ஆயிரத்து 750 ஏக்கரும் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொகுப்பு திட்டம்

மேலும் குறுவை சாகுபடியை அதிகரிக்க குறுவை தொகுப்பு திட்டத்தையும் அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் அமல்படுத்துவதால் விவசாயிகளுக்கு உரம், இடுபொருட்கள், வேளாண் கருவிகள் போன்றவை மானிய விலையில் வழங்கி, விவசாயிகளை அரசு ஊக்கப்படுத்துவதால், உற்பத்திச் செலவு விவசாயிகளுக்கு ஓரளவுக்கு குறைகிறது.

அதன்படி இந்த ஆண்டு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கு ரூ.75.95 கோடி ஒதுக்கீடு செய்தது. தற்போது விவசாயிகள் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் மானிய விலையில் இடுபொருட்களை பெற வேளாண்மைத்துறையின் 'உழவன் செயலி' மூலம் பதிவு செய்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திற்கு மட்டும் குறுவை தொகுப்பு திட்டத்திற்கு ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1.52 லட்சம் ஏக்கரை தாண்டியது

தற்போது தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி இலக்கை தாண்டி 1 லட்சத்து 52 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்றுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி 43 ஆயிரம் ஏக்கர் வரை கூடுதலாக நடைபெற்றுள்ளது. இன்னும் கடைமடை பகுதியான மதுக்கூர், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதி வரை சாகுபடி நடைபெறும் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு கடந்த ஆண்டை விடை சற்று குறைவாக சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 800 ஏக்கர் வரை குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்றன. முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் இந்த சாகுபடி பணிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story