4 பேருக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் காவல் நீட்டிப்பு


4 பேருக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 24 Jun 2023 6:45 PM GMT (Updated: 24 Jun 2023 6:46 PM GMT)

பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கில் 4 பேருக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பரமக்குடி 3-வது வார்டு கவுன்சிலரும், அப்போதைய அ.தி.மு.க நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது, மற்றும் புரோக்கர்களாக இருந்து செயல்பட்ட உமா மற்றும் கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டு 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் அ.தி.மு.க. நிர்வாகி சிகாமணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 பேரும் மீண்டும் ராமநாதபுரம் மாவட்ட மகிளா கோர்ட்டில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதற்காக 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாத் மேற்கண்ட 5 பேர் மீதான விசாரணையை வரும் 30-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சிகாமணி தவிர மற்ற 4 பேரும் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story