வலைத்தள வலைகளில் விழாமல் இருப்போம்; 'சைபர்' குற்றங்களை 'சைபர்' ஆக்குவோம்


வலைத்தள வலைகளில் விழாமல் இருப்போம்; சைபர் குற்றங்களை சைபர் ஆக்குவோம்
x

வலைத்தள வலைகளில் விழாமல் இருப்போம், ‘சைபர்' குற்றங்களை ‘சைபர்' ஆக்குவோம் என்று சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேனி

'சைபர்' குற்றம் என்றால் என்ன தெரியுமா?

சாலையில் நடந்து போகிறோம். எதிரே வந்து ஒருவர் திடீர் என்று கத்தியைக் காட்டி மிரட்டி, 'சத்தம் போட்டா குத்திக்கொன்றுடுவேன். எடு மணிப் பர்சை" என்கிறார்.

பயத்தால் பர்சை கொடுக்கிறோம், அவர் பறந்துவிடுகிறார்.இதை வழிப்பறி என்கிறோம். இதுபோன்ற செயல்களை மனிதர்கள் செய்வதால், இதை மனிதக்குற்றம் என்று சொல்லலாம்.

கம்ப்யூட்டர், செல்போன்கள் உதவியோடு வலைத்தள வழிகளில் இதுபோன்று நடைபெறுவதுதான் தொழில்நுட்ப வழிப்பறி. இதை சைபர் குற்றம் என்கிறோம்.

இந்த இரண்டு வழிப்பறிகளையும் மனிதர்கள்தான் செய்கிறார்கள். முதல் வழிப்பறியை மனிதன் நேரடியாகச் செய்கிறான். இரண்டாவதை தொழில்நுட்பங்களில் நுழைந்து அவனே செய்கிறான்.

இரண்டிலும் நாம் பணத்தை இழக்கிறோம். பயமுறுத்தப்படுகிறோம். அவமானப் படுகிறோம்.

சைபர் குற்றங்கள் அதிகரிப்பு

இன்று மின்னணு தொழில்நுட்பம் (டிஜிட்டல் டெக்னாலஜி) வளர்ந்து, இணைய தளத்தின் பயன்பாடு எழுச்சி அடைந்து வருவதுடன், சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

* வங்கி ஏ.டி.எம். கார்டு காலாவதியாக போகிறது. அதனை புதுப்பிப்பதற்கு உங்களது ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணை கொடுங்கள் என்று தமிழ் கலந்த இந்தியில் பேசி வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகிறார்கள்.

அவர்கள் வங்கியில் இருந்துதான் பேசுகிறார்கள் என்று நினைத்து ரகசிய குறியீடு எண்களை கொடுத்து, பணத்தை இழந்தவர்கள் ஏராளம்.

* வங்கியில் ஆதார் கார்டு எண்ணை இணைக்காவிட்டால், வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுவிடும், மின் கட்டணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் மின் சேவை நிறுத்தப்படும், போக்குவரத்து விதிமீறல் அபராத கட்டணத்தை செலுத்துங்கள் என செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயிலுக்கு அனுப்பும் மோசடி 'லிங்க்'குகள் மூலம் நிழல் உலகில் இருந்து கொண்டு மோசடி மன்னர்கள் பணம் பறித்து வருகிறார்கள்.

* நெட் பேங்கிங் வசதி துண்டிக்கப்பட்டுவிடும், பகுதி நேர வேலைவாய்ப்பு, ஆன்லைன் திருமண மோசடி, ஆபாச வீடியோ கால் அழைப்பு, முக்கிய பிரமுகரின் பெயரில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை தொடங்கி, அந்த நபரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் பறித்தல் என மாறு வேடங்களில் நம்மை சுற்றியே அலைகிறது சைபர் குற்றங்கள்.

* கேரளாவில் 68 வயது முதியவரை சமூக ஊடகம் மூலம் உல்லாச வலையில் வீழ்த்தி ரூ.23 லட்சம் பறித்த ரஷிதா என்ற பெண் சிறைச்சாலையில் தற்போது கம்பி எண்ணுகிறார்.

* கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியை பார்ப்பதற்கு 50 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்குவதாக 'லிங்க்' ஒன்றை சமூக ஊடகங்களில் மோசடிக்காரர்கள் அனுப்பினார்கள். இதன் தீய நோக்கத்தை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசார் எச்சரித்தனர்.

சைபர் கிரைம் குற்றவாளிகள், ஆசையை தூண்டும் விதமாக தூண்டிலை வீசி, அதில் மாட்டிக்கொள்பவர்களை லாவகமாக அமுக்கிவிடுகிறார்கள். இதனால் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, பலர் நொடிப்பொழுதில் இழந்து தவிக்கிறார்கள்.

சிலந்தி வலை போன்று பின்னிக்கிடக்கும் இணைய வலையில், விழுந்தால் நாம் இழப்பது பணம் மட்டும் அல்ல மானமும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

'சைபர் கிரைம்' குற்றவாளிகள் உள்ளூர் முதல் சர்வதேச அளவில் பல கொள்ளை கும்பல்கள் செயல்படுகின்றன. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் யார்? என்று அடையாளம் காண்பதில்தான் சிக்கல் இருக்கிறது.

புதுப்புது அவதாரம் எடுக்கும் சைபர் கிரைம் குற்றவாளிகளை ஒடுக்குவது என்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலான பணியாகும். எனவே பொதுமக்கள்தான் சைபர் கிரைம் என்ற மாய வலையில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். அப்போதுதான் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையை சைபர் (பூஜ்ஜியம்) ஆக்கமுடியும்.

கடன் செயலிகளுக்கு தடை

சைபர் குற்றங்கள், அதன் பாதிப்புகள், தடுக்கும் வழிமுறைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

முஜிபூர் ரகுமான் (வியாபாரி, கம்பம்):- சைபர் குற்றங்கள் நாளுக்குநாள் பெருகி வருகிறது. புதிது, புதிதாக மோசடிகள் அரங்கேறுகின்றன. ஆன்லைன் வர்த்தகத்தில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதாக மோசடி குறுஞ்செய்திகள் அதிகம் வருகின்றன. பிரபல நிறுவனங்களை போன்றே இணையதள முகவரி இருப்பதால் மக்கள் அதை போலியானது என்று தெரியாமல் பொருட்களை வாங்குவதற்கு இணையவழியில் பணம் செலுத்துகின்றனர். ஆனால், பொருட்கள் வருவதே இல்லை. வங்கியில் இருந்து பேசுவதாக கூறியும் அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் பெருகி வருகிறது. இதுதொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்.

சிவசங்கர் (செல்போன் கடைக்காரர், தேனி):- வங்கிகளில் அவசர தேவைக்கு சிறு கடன் பெறுவது கூட சிரமமாக உள்ளது. ஆனால், கடன் செயலிகள் உடனுக்குடன் எளிதில் கடன் கொடுப்பதால் மக்கள் அவசர தேவைக்கு கடன் பெற்று ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இதுபோன்ற கடன் செயலிகளை முழுமையாக தடை செய்ய வேண்டும். எனவே, வங்கிகளில் சொத்துக்களை ஈடாக கேட்காமல் சிறுகடன்களை அதிக அளவில் வழங்க வேண்டும். வங்கிகளில் கடன் வாங்கும் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்.

விழிப்புணர்வு பாடத்திட்டம்

பார்த்திபன் (ஆசிரியர், தேனி):- படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடி இன்றி அனைத்து தரப்பினரும் இதுபோன்ற இணையவழி மோசடி கும்பலால் பாதிக்கப்படுகின்றனர். இனி வரும் காலங்களில் சமூக வலைத்தளங்களின் தாக்கமும், அதன் மூலம் இதுபோன்ற சைபர் குற்றங்களும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு, சமூக வலைத்தளங்களை கையாள்வது, வங்கி நடைமுறைகள் போன்றவற்றை பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் கற்றுக்கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவற்றையும் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம். மாணவ-மாணவிகள் மூலமாக அவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள். விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே மோசடி நபர்களின் வலையில் சிக்காமல் இருக்க முடியும்.

பாதுகாப்பு அம்சங்கள்

தாமரைக்கண்ணன் (சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தேனி):- சமூக வலைத்தளங்கள், யூடியூப், செல்போன் குறுஞ்செய்தி போன்றவற்றுக்கு வரும் வேலைவாய்ப்பு, பணம் சம்பாதிப்பது தொடர்பான விளம்பரங்களை நம்பிதான் பலர் ஏமாறுகின்றனர். அதுபோன்ற விளம்பரங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொள்வது இல்லை. சமீபகாலமாக கடன் செயலிகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற மோசடியான கடன் செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்யும் போதே அதில் கேட்கும் அனுமதிகளை எல்லாம் கொடுத்தால் தான் செயல்படுத்த முடியும். புகைப்படம், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்களை மட்டும் பெற்றுக்கொண்டு ரூ.1 லட்சம் வரை கடன் கொடுக்கிறார்கள். அவ்வாறு பெறும் புகைப்படம், ஆதார் எண்ணை பயன்படுத்தி மோசடி நபர்கள் வேறு கடன் செயலிகளிலும் பணம் பெற்று மோசடி செய்கின்றனர். மேலும் கொடுத்த கடனை திருப்பிச் செலுத்திய பின்னரும், புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டுவதாக புகார்கள் வருகின்றன. இதுபோன்ற செயலிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து நட்பு அழைப்பு வந்தால் அதை ஏற்காமல் இருப்பதே நல்லது. மேலும் சமூக வலைத்தள கணக்குகளை நண்பர்கள் மட்டும் பார்க்கும் வகையில் பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் பரிசுப் பொருட்கள், முதலீட்டுக்கு அதிக வட்டி, வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு, இலவச செல்போன் டேட்டா போன்ற ஆசையை தூண்டும் குறுஞ்செய்திகள் எது வந்தாலும் அதை நம்பி ஏமாறக்கூடாது. இதுபோன்ற குறுஞ்செய்திகளில் வரும் இணைப்பு பக்கத்தை திறந்து பார்க்காமல் அழித்து விட வேண்டும். சைபர் குற்றங்கள் தொடர்பாக பள்ளி, கல்லூரிகளிலும், பொதுமக்களிடமும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

1,095 சைபர் கிரைம் புகார்கள்

தேனி மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2-வது தளத்தில் இந்த போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சைபர் குற்றங்கள் தொடர்பாக இதுவரை 1,095 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 83 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 800-க்கும் மேற்பட்ட புகார்களின் மீது மனு ரசீது வழங்கிய நிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், இணையவழி மோசடி மூலம் ரூ.6 கோடியே 71 லட்சத்தை மக்கள் பறிகொடுத்துள்ளனர். அவற்றில் ரூ.1 கோடியே 7 லட்சத்து 74 ஆயிரத்தை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். மற்ற பணத்தை மீட்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தொலைந்து போன மற்றும் திருடு போன ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன்களும் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கட்டமைப்பு வசதிகள்

சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், போலீஸ் நிலையங்களில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையம் ஒரே அறையில் செயல்படுகிறது. போலீஸ் நிலையத்துக்கு என்று தனி கட்டிடம் கட்டி மற்ற போலீஸ் நிலையங்கள் போன்ற கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதுபோல், தேனியில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர், 5 போலீசார் ஆகியோருடன் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் செயல்படுகிறது. இது போலீசாருக்கு பணிச்சுமையை அதிகரிக்கிறது. எனவே, சைபர் கிரைம் போலீஸ் நிலையத்துக்கு சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையத்துக்கு இணையாக போலீசாரின் எண்ணிக்கையை அதிகரித்து, தேவையான தகவல் தொழில்நுட்ப சாதனங்களை வழங்க வேண்டிய தேவை உருவாகி உள்ளது.


Related Tags :
Next Story