பெங்களூரு விமான நிலையத்தில் வேலையில் சேர போலி பணி ஒப்புதல் கடிதத்தை அனுப்பி கும்பகோணம் வாலிபரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை


பெங்களூரு விமான நிலையத்தில் வேலையில் சேர  போலி பணி ஒப்புதல் கடிதத்தை அனுப்பி கும்பகோணம் வாலிபரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி  சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x

பெங்களூரு விமான நிலையத்தில் வேலையில் சேருவதற்கான போலி பணி ஒப்புதல் கடிதத்தை அனுப்பி கும்பகோணம் வாலிபரிடம் ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்

பெங்களூரு விமான நிலையத்தில் வேலையில் சேருவதற்கான போலி பணி ஒப்புதல் கடிதத்தை அனுப்பி கும்பகோணம் வாலிபரிடம் ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான நிலையத்தில் வேலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 21 வயது நிரம்பிய பட்டதாரி வாலிபர் ஒருவர் வேலை தேடி வந்தார். சம்பவத்தன்று இவருடைய சமூக வலைத்தளத்திற்கு(இன்ஸ்டாகிராம்) பெண்ணின் பெயரில் ஒரு குறுந்தகவல் வந்துள்ளது.

முதலில் நண்பர்போல் பேசிய அந்த நபர், பட்டதாரி வாலிபர் குறித்த தகவல்களை பெற்று கொண்டார். அப்போது கும்பகோணம் வாலிபர், தான் வேலை தேடி கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

மறுமுனையில் பேசிய அந்த நபர், தான் பெங்களூரு விமான நிலையத்தில் வேலை பார்த்து வருவதாகவும், பணம் கொடுத்துத்தான் வேலையில் சேர்ந்ததாகவும், உங்களுக்கும் வேலை வேண்டும் என்றால் பணம் கொடுத்தால் வாங்கி விடலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

போலி பணி ஒப்புதல் கடிதம்

இதனை உண்மை என்று நம்பிய கும்பகோணம் வாலிபர், தன்னிடம் மறுமுனையில் பேசியவர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் அனுப்பி வைத்து உள்ளார். இதனை தொடர்ந்து கும்பகோணம் வாலிபருக்கு விமான நிலையத்தில் சேருவதற்கான போலி பணி ஒப்புதல் கடிதத்தை இன்ஸ்டாகிராமில் பேசிய வாலிபர் மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார்.

இதனை பதிவிறக்கம் செய்து கொண்ட கும்பகோணம் வாலிபர், தனக்கு வந்த பணி ஒப்புதல் கடிதம் போலியானது என்று தெரியாமல் அந்த கடிதத்தோடு பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அந்த கடிதத்தை கும்பகோணம் வாலிபர் கொடுத்துள்ளார். அப்போதுதான் அது போலியானது என்றும், தன்னிடம் பணம் மோசடி செய்யப்பட்டதும் அவருக்கு தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கும்பகோணம் வாலிபர், தஞ்சை மாவட்ட சைபர்கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ராமதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story