'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

சாலையில் தேங்கும் கழிவுநீர்

போடி திருமலாபுரம் 16-வது வார்டு பட்டாளம்மன் கோவில் தெருவில் சாக்கடை கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், போடி.

பஸ்சுக்குள் ஒழுகும் மழைநீர்

திண்டுக்கல்லில் இருந்து தேனிக்கு இயக்கப்படும் சில பஸ்களில் பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த பஸ்களுக்குள் தண்ணீர் ஒழுகுவதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மழைநீர் ஒழுகாதவாறு பஸ்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் அல்லது புதிய பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யனார், திண்டுக்கல்.

கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

பழனியை அடுத்த தாழையூத்து ஊராட்சி நரிக்கல்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய் கழிவுநீர் வடிந்து செல்லும் வகையில் அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர்மக்கள், நரிக்கல்பட்டி.

ஆக்கிரமிப்பின் பிடியில் சாலை

போடி-ரெங்கநாதபுரம் சாலையில் மங்கம்மா பிரிவு சாலை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டதால் வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோபிநாத், போடி.

வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்

தேனி அரண்மனைபுதூர் பசுமை நகர் 6-வது தெருவில் மழைநீர் வடிகால் வசதி செய்யப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் தெருவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்த போது அந்த தெருவில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் பாதி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

-அரவிந்தன், தேனி.

சகதி காடாக மாறும் சாலை

பெரியகுளம் தாலுகா வடகரை அரண்மனை தெரு பகுதியில் தார்சாலை அமைக்கப்படவில்லை. மண் பாதையாகவே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலசுப்பிரமணி, பெரியகுளம்.

சுகாதாரமற்ற கழிப்பறை

பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ஆண்களுக்கான கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கழிப்பறையை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், பெரியகுளம்.

சேதமடைந்து வரும் குடிநீர் தொட்டி

ரெட்டியார்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் தொட்டியில் முழுமையாக தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. மேலும் தொட்டியை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. எனவே குடிநீர் தொட்டியை சீரமைப்பதுடன், புதர்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.

சாலையின் நடுவே பள்ளம்

பழனி-மானூர் சாலையில், பெரியப்பாநகர் பிரிவு அருகே சாலையின் நடுவே பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அறிவாசன், மானூர்.

தெருநாய்கள் தொல்லை

ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டையில் இரவில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்திச்சென்று கடிக்க முயல்கின்றது. அப்போது அவர்கள் வாகனங்களை அதிவேகமாக ஓட்டிச்சென்று விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகமது ரபீக், சித்தையன்கோட்டை.

-----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

----------------------


Next Story