தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 5 April 2023 6:45 PM GMT (Updated: 5 April 2023 6:46 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

அகலமான தார்சாலை தேவை

முன்சிறையில் இருந்து கோழிவிளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் இருபுறமும் 4 முதல் 6 அங்குலங்கள் உயரத்திற்கு காங்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், எதிரெதிர் திசையில் வரும் வாகனங்கள் செல்லும் போது இடையூறு ஏற்படுகிறது. மேலும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அவசரத்திற்கு சாலையில் உள்ள காங்கிரீட் தடுப்பை தாண்டி ஓரமாக நிறுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையோரத்தில் உள்ள காங்கிரீட் தடுப்புகளை அகற்றி அகலமான தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினு, குன்னத்தூர்.

அகற்ற வேண்டிய மரம்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கோர்ட்டு ரோட்டில் இருந்து டதி பெண்கள் பள்ளி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் மிக பழமையான மரம் ஒன்று பட்டுப்போன நிலையில் சாலையோரத்தில் நிற்கிறது. எப்போது வேண்டுமானாலும் அந்த மரம் காற்றின் வேகத்திற்கு அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாஞ்சில் விஷ்ணு, சந்தைவிளை.

சாலையில் பள்ளம்

தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்காவிளை சந்திப்பில் மேற்கு கடற்கரை சாலை செல்கிறது. இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். இந்த சந்திப்பு பகுதியில் சாலை சேதமடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால், வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சூர்யா, புதூர்.

வாகன ஓட்டிகள் அவதி

மேலசங்கரன்குழி ஊராட்சிக்கு உட்பட்ட சாந்தபுரத்தில் இருந்து தோப்பூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், ராமநாதபுரம், குருந்தன்கோடு.

கண்காணிப்பு கேமரா அமைக்கப்படுமா?

மார்த்தாண்டம் சிராயன்குழியில் இருந்து உண்ணாமலைகடை பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பங்கள் அதிகமாக நடைபெறுகிறது. இதனால், இரவு அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த சாலையில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெஸ்பின், சிராயன்குழி

நடவடிக்கை எடுப்பார்களா?

நாகர்கோவில் ராமன்புதூர் சற்குணவீதியில் செயின்ட் மேரி தெரு உள்ளது. இந்த தெருவில் நடைபாதையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடை முறையாக பாராமரிக்காமலும், அதன் சிலாப்புகள் ஆங்காங்கே சேதமடைந்தும் காணப்படுகிறது. மேலும் நடைபாதையும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பாதசாரிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, சாலையை சீரமைக்கவும், கழிவுநீர் ஓடையை தூர்வாரி சிலாப்புகள் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆன்டணி, ஆசாரிபள்ளம்.


Next Story