ஓசூர் கெலவரப்பள்ளி அணை திறப்பு
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து குவியல், குவியலாக நுரை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்
தென்பெண்ணை ஆறு
கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, வரத்தூர் ஏரி வழியாக பெங்களூரு மாநகரத்தின் கழிவுநீர் கலந்தும் தென்பெண்ணை ஆற்றின் எல்லையோரமாக உள்ள தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுநீர் கலந்தும் தமிழகத்தின் கெலவரப்பள்ளி அணைக்கு ரசாயன கழிவுகளுடன் கருநிறத்தில் நீர் வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் நீரில் நுரை அதிகரித்து காணப்பட்டது.
தண்ணீர் திறப்பு
இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 490 கனஅடியாக இருந்தநிலையில், நேற்று வினாடிக்கு 701 கனஅடி நீராக அதிகரித்து, அணைக்கு வந்தது.
கெலவரப்பள்ளி அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக 570 கனஅடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், ஆற்றில் வெளியேற்றப்படுவது நீரா அல்லது நுரையா என்று சந்தேகப்படும் அளவிற்கு 2 அடி உயரத்திற்கு நீரில் இருந்து நுரை பொங்கி காட்சியளிக்கிறது.
துர்நாற்றம்
துர்நாற்றத்துடன் நீர் கருநிறத்திலும், ரசாயன நுரை பனிக்கட்டிகளை போன்று காட்சியளித்து குமட்டலை ஏற்படுத்தும் வகையில் துர்நாற்றம் வீசுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையின் முழு கொள்ளளவான 44.28 அடியில்,, 42.64 அடி தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது.